உங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள்! மகம் முதல் கேட்டை வரை!

0

மகம்
சூழ்நிலைக்குத் தக்கபடி நடந்துகொள்வார்கள். மற்றவர்களை அனுசரித்துச் செல்வதில் சமர்த்தர்கள். தலைமைப் பதவி இவர்களைத் தேடி வரும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதமாக நடைபெறும். எவ்வளவுதான் செல்வாக்கும் வசதியும் இருந்தாலும் இவர்களின் மனதில் இனம் தெரியாத கவலை இருக்கக்கூடும். பெரும்பாலும் மண வாழ்க்கைப் பற்றிய கவலையாகத்தான் இருக்கும். அரசியல், தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிப்பார்கள்.

பூரம்
பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல படிப்பு, வேலை, பண வசதி இருக்கும். இருந்தாலும் இவர்களின் மனதில் அடிக்கடி சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். பிறருக்கு வலியப்போய் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். தன்னைவிடவும் கீழ்மட்ட நிலையில் உள்ளவர்களையும் கைதூக்கிவிட விரும்புவார்கள். அரசுத்துறை, தொழிற்சாலைகள், உணவு விடுதி போன்ற தொழில்கள் அமையும்.

உத்திரம்
வாழ்க்கையில் லட்சியத்துடன் முன்னேறத் துடிப்பவர்கள். சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். சுயகௌரவத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அடிக்கடி எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். என்ன நடந்தாலும் இவர்கள் அசைந்து கொடுக்கமாட்டார்கள். அரசுத் துறை, கடல் சார்ந்த தொழில்கள், ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் இவர்களின் பணி அமையும்.

அஸ்தம்
எல்லோருக்கும் நல்லது செய்ய விரும்புபவர். உண்மையாக நடந்துகொள்வதுடன், மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும், அந்தத் துறையில் இவர்கள் முதன்மையான இடத்தைப் பெற்றுவிடுவார்கள். இவர்களின் கை ராசியான கை என்று மற்றவர்கள் சொல்லும்படி, இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கலைத்துறை, வியாபாரம், பதிப்புத்துறை போன்ற துறைகளில் இவர்கள் பிரகாசிப்பார்கள்.

சித்திரை
ஆளுமைத் திறன் மிக்கவர்கள். எல்லோரையும் தனக்குக் கீழ்ப்படியச் செய்து வேலை வாங்குவதில் சமர்த்தர்கள். ஒருவருக்கு ஓர் ஆபத்து என்றால், உடனே ஓடோடிச் சென்று உதவி செய்வார். இவர்களுக்கு அச்சம் என்றாலே என்னவென்று தெரியாது. கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருப்பார்கள். நீதித்துறை, மருத்துவம், அறிவியல் சார்ந்த துறைகளில் இவர்களின் பணி அமையும்.

சுவாதி
இறை பக்தி மிகுந்தவர்கள். சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். மற்றவர்களின் அன்புக்குக் கட்டுப்படுவார்களே தவிர, அதிகாரத்துக்கு அடிபணியமாட்டார்கள். பல மொழிகளைக் கற்கும் வாய்ப்பு அமையும். மற்றவர்கள் பாராட்டும்படியாக வாழ்ந்து காட்டுவார். அரசு நிர்வாகம், காவல் துறை போன்றவற்றில் உயர் பதவி வகிக்கும் யோகம் உண்டு. ஒருசிலர் அலங்காரப் பொருட்கள் விற்பனையிலும், உணவு விடுதி நடத்துவதிலும் ஈடுபட்டிருப்பார்கள்.

விசாகம்
மனதில் தைரியம் அதிகம் உள்ளவர்கள். எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். நிர்வாகம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்கள்தான். எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் மீண்டு வந்துவிடுவார்கள். வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்தாலும் முயற்சி செய்து முன்னேறிவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவார்கள். மற்றபடி கல்வித்துறை, பதிப்பகம் போன்ற துறைகளில் ஈடுபடுவர்.

அனுஷம்
மனதில் பல நல்ல பண்புகளைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் அதிக அன்பு செலுத்துவார்கள். வாழ்க்கையில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் சமாளித்து இறுதியில் வெற்றியும் பெற்றுவிடுவார்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. இவர்களும் பெரும்பாலும் சொந்தமாகத் தொழில் செய்வதையே விரும்புவார்கள். சிலர் மருத்துவம் சார்ந்த துறைகளில் ஈடுபடுவர். இவர்களில் சிலருக்கு இசைத்துறையில் புகழ் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

கேட்டை
இவர்கள் உண்மையாக இருப்பதுடன் மற்றவர்களும் உண்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நகைச்சுவையாகப் பேசுவார்கள். தெய்வபக்தி மிக்கவர்கள். சாஸ்திரங்களில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். தர்மச் செயல்களில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். பத்திரிகைத்துறை, ராணுவம், இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் இவர்களின் பணி அமையக்கூடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூலம் முதல் ரேவதி வரை உங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள்!
Next articleஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பை மறைய செய்ய சூப்பர் வீட்டு வைத்தியம்!