இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் உள்ளதா?

0

கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் கடந்த கடந்த 27.10.2013 ஆம் திகதி முஸ்லிம் பங்கரவாதம் குறித்தும் கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்கள் குறித்தும் முன்னெச்சரிக்கையாக எழுதியுள்ள கட்டுரை மீள்பதிவினை இங்கே தருகிறோம்.

கடந்த பல மாதங்களாக இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் உள்ளதாக பல தடவைகள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சொல்லி வருகின்றார்.அத்துடன் பொதுப்பலயும் அடிக்கடி சொல்லி வருகின்றது.பாதுகாப்புச் செயலரின் கருத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கண்டனம் தெரிவித்திருந்தார்.

உண்மையில் இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் ஒன்று இல்லவே இல்லை.ஆனால் முஸ்லிம் பயங்கரவாதம் ஒன்றை இலங்கைக்குள் தோற்றுவிக்கப் பார்க்கின்றார்கள்.அந்தப் பயங்கரவாத இயக்கங்களுடன் இலங்கை முஸ்லிம்களை இணைத்து முடிச்சு போடப் பார்க்கின்றார்கள் இதுதான் நிஜம். அது எப்படி?

புலிகள் அழிப்பில் பாகிஸ்தானின் பங்கு

திருகோணமலை மாவிலாறு பகுதியில்தான் புலிகளுக்கு எதிரான யுத்தம் ஆரம்பமானது. இலங்கைப் படையினர் முதன் முதலாக பாகிஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்ட மல்டிவிரல் என்னும் யுத்த தாங்கிகளையே புலிகளுக்கு எதிராகப் பாவித்தார்கள்.இந்த யுத்த தாங்கிகளே அதிகளவு புலிகளுக்கு எதிராகப் பாவிக்கப்பட்டது இந்த யுத்த தாங்கிகளின் தாக்குதல்களுக்கு புலிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

புலிகளை ஒளித்த விடயத்தில் இ;ந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் பங்களிப்பும் வகிபாகம் என்பதும் மிகவும் முக்கியமானது. இலங்கைக்கு பெருமளவு யுத்த தாங்கிகளை பாகிஸ்தான் வழங்கியுள்ளது.மற்றும் தொடர்ந்து ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக இன்னும் பாகிஸ்தான் செயல்பட்டு வருகின்றது.

வடக்கில் பாகிஸ்தானினுக்குக் கைமாறாக உளவு நிலையம்

பாகிஸ்தான் இலங்கைக்கு யுத்ததாங்கிகள் வழங்கியது மற்றும் தொடர்ந்து இலங்கைக்கு ஜெனீவாவில் ஆதரவு வழங்கி வருவது போன்றவற்றுக்குக் கைமாறாக இந்தியாவுக்குத் தெரியாமலேயே வடக்கில் பாகிஸ்தான் இரண்டு வேவு தளங்களை நிறுவியுள்ளது.அதற்கான அனுமதியை பாகிஸ்தானுக்கு இலங்கை வழங்கியுள்ளது.

இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவும் இந்திய கடற்பரப்பில் இந்திய ராணுவத்தின் தொடர்பாடலை இடைமறித்து அவதானிக்கவும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவு அமைப்பு யாழ்ப்பாணத்தில் உளவு அவதானிப்பு நிலையத்தை நிறுவியுள்ளது. இந்த உளவுத் தளங்களில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டங்களை அவதானிக்கும் கருவிகளையும் ஐ.எஸ்.ஐ பொருத்தியுள்ளதாம்.

இந்திய றோ உளவு அதிகாரிகள் இந்த வேவு தளங்களை கண்டு பிடித்துள்ளார்கள்.

இந்தியாவின் அந்தமான் தீவில் இந்திய கடற்படையினரின் கப்பல்களின் நடமாட்டங்களையும் ,தொடர்பாடல்களையும் இடைமறிக்கவும் சீனா இதே போன்றதொரு அவதானிப்பு நிலையத்தை இந்தோனேஷியாவுக்கு அருகாமையிலுள்ள கொகோ தீவில் அமைத்துள்ளது.

பாகிஸ்தானின் யாழ்ப்பாண அவதானிப்பு நிலையம் என்பது இந்தியாவுக்கு மிகவும் அண்மையில் உள்ளது. இதற்கருகிலேயே ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இந்திய கடற்படையினரின் கிழக்குப் பிராந்திய தளம் உள்ளது. அங்கிருந்தே அண்மையில் ரஷ்யாவிலிருந்து இந்தியா பெற்றுள்ள அணுசக்தி நிலையம் மற்றும் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இயங்கி வருகின்றது. அத்துடன் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் உள்ளது.

பாகிஸ்தானின் இந்த வேவு தளம் மூலம் தென்னிந்திய கரையோரங்களை அவதானிக்கவுள்ளது. ஆக இந்தியாவின் நான்கு திசைகளிலும் இருந்து இந்தியாவின் எதிரி நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்தள்ளது.

யாழில் இந்திய துணைத் தூதரகம்

பாகிஸ்தானின் அகலக்கால் இலங்கைக்குள் பதிந்த பின்புதான் யாழ்ப்பாணத்தில் இந்தியா முற்று முழுதாக றோ அதிகாரிகளைக் கொண்டு இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்றை இந்தியா நிறுவியுள்ளது. இந்தியா தனது தேசிய பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பிலும்; தேவையிலும் உள்ளது.

இந்தியாவின் நேசநாடு என்று சொல்கின்ற இலங்கைக்குள் இருந்து இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான்,சீனா ஆகிய நாடுகளின் பயங்கரவாதமோ அல்லது நாசகார வேலைகளையோ யாரும் அனுமதிக்கவும் முடியாது. செய்யவும் கூடாது. தூண்டவும் கூடாது.

இலங்கையைப் பொறுத்த மட்டில் நாட்டுக்குள் பாகிஸ்தானையும் வரவழைத்துக் கொண்டு சீனாவை நம்பிக் கொண்டு இந்தியாவை பகைத்துக் கொள்ளவோ அல்லது இந்தியாவைக் கழட்டி விடவோ முடியாது. அப்படி நடந்தால் அது ஆரோக்கியமான அரசியல் முன்னெடுப்பாக அமையாது. அந்த முன்னெடுப்பு மிகவும் ஆபத்தானது என்பதை காலம் பதில் சொல்லும்

இந்தியாவைப் பொறுத்த மட்டில் இலங்கை தனது நட்பு நாடு என்பதாலும் இந்தியா மீது இலங்கை படையெடுக்காது என்ற நம்பிக்கையிலும் இந்தியா தூங்க முடியாது.நட்பு நாடான இலங்கைக்குள் இருந்து இலங்கைக்குத் தெரியாமலேயே இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் துணையுடன் நாசவேலைகளில் யாராவது ஈடுபடலாம். அதனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கருதி இந்தியா தனது உளவுப் படையை உஷார் படுத்த வேண்டிய கட்டாயத் தேவையுள்ளது.அதை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

பாகிஸ்தானின் நுழைவு முஸ்லிம்களுக்கு ஆபத்தானது

இலங்கைக்குள் பாகிஸ்தான் முஸ்லிம் நாடு என்பதால் இலங்கை முஸ்லிம்கள் சிலர்; குறிப்பாக வட கிழக்கு முஸ்லிம்கள் சிலர் பாகிஸ்தானின் எந்தவொரு சதி வேலைகளுக்கும் நாச வேலைகளுக்கும் ,துணை போகக் கூடாது ஆதரிக்கவும் கூடாது. ஆனால் அப்படிப்பட்ட நாச வேலைகளில் சில முஸ்லிம்கள் ஈடுபடக் கூடிய அதிக வாய்ப்புள்ளது. இவைகளைக் கண்டறிய வேண்டிய தேவை இந்தியாவுக்குள்ளது.

ஆனால் பாகிஸ்தானின் எந்தவொரு பயங்கர வாதத்தையும் இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.அதற்குத் துணை போகவும் கூடாது. அப்படி யாராவது துணை போவார்களேயானால் அதன் பின் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும்.இதன் அடிப்படையில்தான் முஸ்லிம் தீவிரவாதம் இலங்கைக்குள் உள்ளதாக அடிக்கடி பாதுகாப்புச் செயலர் பயம் காட்டி வருகின்றார். இலங்கைக்குள் பாகிஸ்தானின் நுழைவு என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது.

பாகிஸ்தானின் பயங்கரவாதம் என்பது உருது மற்றும் அரபு மொழி பேசும் முஸ்லிம் இளைஞர்களால் மட்டுமே கவரப்பட்டு வந்தது.ஆனால் கடந்த காலங்களாக தமிழ் நாட்டில் தமிழ் பேசும் முஸ்லிம் இளைஞர்களும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.என்ற உளவு அமைப்பின் மூலம் உள்வாங்கப்பட்டு விட்டார்கள்.தமிழ் நாட்டில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சிறைகளில் வாடுகின்றார்கள்.

கடந்த மாதமும் மிகவும் முக்கியமான தீவிரவாதிகள் 3 பேர் தமிழ்நாட்டில் துப்பாக்கிச் சண்டையின் மூலமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இலங்கையின் பயங்கரவாத் தடைச் சட்டம் போன்று இந்தியாவின் பொடா சட்டத்தின் மூலம் வெளியே வர முடியாதவாறு சிறைகளில் அடைபட்டுள்ளார்கள்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தமிழக சிறைகளில் தமிழக முஸ்லிம் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.அது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ என்ற உளவு அமைப்பின் சதி வேலைகளில் இந்த இளைஞர்கள் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டில்தான் சிறைகளில் உள்ளார்கள்

இலங்கையில் தலிபான், அல்கொய்தாவுக்குத் தடை

அல்கொய்தா மற்றும் தலிபான் இயக்கம் பற்றி இலங்கையில் மக்களுக்கு பெரிதாகத் தெரியாது.இந்த இயக்கங்களுக்கும் இலங்கைக்கும் சம்மந்தமேயில்லை. குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் இந்த இயக்கங்களுக்கும் எவ்விதமான தொடர்களும் இருக்கின்றதற்கான எந்தத் தகவல்களும் அதாரங்களும் இல்லை.

ஆனால் இந்த இரண்டு இயக்கங்களுக்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது. அதாவது இந்த இயக்கங்கள் பற்றிய ஆவணங்கள் வைத்திருப்பது மற்றும் ஆதரவுகள் பண உதவிகள் அளித்தல் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்தக் குற்றங்களில் சிக்குவோர்கள் குறைந்தது 5 வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

தலிபான் என்பது ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் முல்லா உமரின் படையினர். இந்தப் படையினர் இன்னும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டுப் படையினருக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்,

அல்கொய்தா என்பது ஒசாமா பின்லாடனின் படையினர்.உலகம் முழுவதும் அல்கொய்தா பரவியுள்ளதாகவும் உலகம் முழுவதும் ஒரு வலைத்தளம் (நெட்வேர்க்) மூலமாக இயங்கி வருவதாக அமெரிக்கா சொல்கின்றது. இந்த இரண்டு இயக்கங்களும் இலங்கையில் இல்லை என்றுதான் இலங்கை பொலிஸ் சொல்கின்றது.இந்த இயக்கம் சம்பந்தமான எந்தவொரு ஈடுபாடும் இலங்கையில் இல்லையென்பதை இலங்கைப் பொலிஸ் உறுதிப்படுத்துகின்றது.

இலங்கை முஸ்லிம்களை சிக்கவைக்கச் சதியா

தமிழக இளைஞர்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சிக்க வைத்தது போன்று இலங்கை முஸ்லிம் இளைஞர்களையும் பாகிஸ்தான் சிக்க வைக்க முயற்சிகள் செய்யலாம். ஏனெனில் முஸ்லிம் இயைஞர்களை பாகிஸ்தான் பண ஆசைகளைக் காட்டி மயக்கலாம்.

வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களும் பாகிஸ்தானின் வலையில் சிக்கலாம். இப்படியாக தனிப்பட்ட முறையில் யாராவது சிக்கினால் அதனை வைத்து இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் உள்ளது என்று இலங்கையின் பேரினவாதிகளும் கொக்கரிக்கலாம்.அரசும் ஆட்டம் போடலாம்.

ஏன் அதை வைத்து அமெரிக்காவுக்கும் தளம் அமைத்துக் கொடுக்கலாம்.அதன் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கை முஸ்லிம்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் அவர்களுக்கும் அல்கொய்தாவுக்கும் தலிபான்களுக்கும் தொடர்புள்ளதாக ஒரு பிம்மம் காட்டப்படும்.

உண்மையில் தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ யாராவது தனிப்பட்ட முறையில் பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது என்பது அந்த நபரின் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் வேலையே தவிர அது திட்டமிட்டுச் செய்யும் செயல் அல்ல.அது முஸ்லிம் சமூதாயத்தின் வேலையும் அல்ல.

இலங்கை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானால் நன்மையில்லை

பாகிஸ்தானைப் பொறுத்த மட்டில் முஸ்லிம் நாடு என்றும் பாகிஸ்தான் முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொள்ளும் என்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் எந்த நாடும் தனது சொந்த நலனில்தான் அக்கறை கொள்ளும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மியன்மாரில் ராணுவ ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் கொலைவெறியை உலகமே அறியும் அளவுக்கு நடந்துகொண்டிருக்கின்றது.ஆனால் பாகிஸ்தான் ஒரு சிறிய கண்டனமாவது மியன்மாருக்கு எதிராகப் பேசியதில்லை.

ஏனெனில் மியன்மார் பாகிஸ்தானின் நேச நாடு,உறவு நாடு.நட்பு நாடு.அதனால் மியன்மாருக்கு எதிராக மியன்மார் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் அங்கு நடைபெற்று வரும் மனித உரிமைகளுக்கு எதிராகவும் பாகிஸ்தானால் பேச முடியவிi;லை.அதே போன்றுதான் இந்தியாவும்.மியன்மார் இந்தியாவின் நேச நாடு உறவு நாடு என்பதால் மியன்மாருக்கு எதிராக இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளது.

சீனாவின் உர்குர் பகுதியில் முஸ்லிம்கள் மீது சீன அரசு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.சீனாவின் இந்த மனித உரிமை மீறல்களை நண்;பண்டா நாடு பாகிஸ்தான் வாயே திறக்கவில்லை. நண்பேண்டா நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காட்டுதர்பார்களை நண்பேண்டா நாடுகள் கண்டு கொள்ளமாட்டாது.

இதுதான் நண்பேண்டா நாடுகளின் வெளியுறவுக் கொள்கை. ஆக பாகிஸ்தான் இலங்கைக்குள் நுழைந்த நோக்கமே இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுவதற்காகவே என்றி வேறு நோக்கமில்லை.அதனால் பாகிஸ்தான் இலங்கை முஸ்லிம்களுக்கு உதவும் காப்பாற்றும் என்று இலங்கை முஸ்லிம்கள் பாகிஸ்தானை நம்பவே கூடாது.பாகிஸ்தான் முற்று முழுதாக அதன் நன்மை கருதி இலங்கைக்குள் அகலக் கால் பதித்துள்ளது.

இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளினால் நடத்தப்படும் எத்தனையோ சம்பவங்களுக்கு எதிராக பாகிஸ்தான் ஏதாவது குரல் கொடுத்துள்ளதா? நண்பேண்டா நாடு என்றால் இலங்கைக்குள் நடக்கும் இனவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தானால் முடியாதா.? முடியும் ஆனால் பாகிஸ்தான் செய்யாது. காரணம் நண்பேண்டா நாடு.இந்த நிலையில் இலங்கை முஸ்லிம்கள் பாகிஸ்தானின் எந்தவொரு செயலுக்கும் ஆதரவுளிக்கக் கூடாது.பாகிஸ்தானை நம்பவும் கூடாது.

பாகிஸ்தான் முஸ்லிம் நாடு என்பதால் இலங்கை முஸ்லிம்கள் சிலர் குறிப்பாக வட கிழக்கு முஸ்லிம்கள் சிலர் பாகிஸ்தானின் சதி வேலைகளுக்கும்,நாச வேலைகளுக்கும் துணை போகக் கூடிய அதிக வாய்ப்புள்ளது.இவைகளைக் கண்டறிய வேண்டிய தேவை இந்தியாவுக்குள்ளது.

வட கிழக்கு முஸ்லிம்கள் யாரும் பாகிஸ்தானின் சதி வேலைகளுக்குத் துணை போகவும் கூடாது ஆதரிக்கவும் கூடாது.அப்படி யாராவது பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு துணை போவார்களேயானால் அதன் பின்விளைவு இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்.இலங்கைக்குள் பாகிஸ்தானின் நுழைவு என்பது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது.முஸ்லிம்களை வலிந்து பாங்கரவாதத்தினுள் தள்ளிவிடும் செயலாகவே அமைந்துவிடும்.

இந்த நோக்கத்திற்காகத்தான் பொதுப்பல சேனா வலிந்து முஸ்லிம்களை இழுக்கின்றது.முஸ்லிம்களை பயங்கவாதிகளாக்க முயற்சிக்கின்றது. சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரிப்பதற்கு பொதுப்பல சேனா பெரும் பிரயத்தனம் செய்கின்றது.இந்தப் பிரயத்தனம் அண்மையில் நடந்து முடிந்துள்ள மத்திய, வடமேல் மாகாணத் தேர்தல்களில் எதிரொலித்துள்ளது.அது தாக்கம் செலுத்தியுள்ளது.

இந்தியாவின் அமைதியைக் குழப்புவதற்காகவும்,இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் தொல்லை கொடுப்பதற்காகவும் இந்தியாவின் எதிரி நாடுகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றது. இந்திய உளவுப் படையினர் வர்த்தகர்கள் வேடம் பூண்டு வட கிழக்கில் சுற்றி வருவதால் ஏதாவது ஒரு சிறிய பயங்கரவாதச் செயல்களில் யாரும் ஈடுபட்டாலும் அவைகள் பற்றி உடன் இலங்கைக்கு இந்தியா அறியத் தந்துவிடும் அதனால் இந்திய உளவுப் படையினர் இலங்கையில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வருவது இலங்கைக்குள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகின்றது.

இந்திய றோவால் முஸ்லிம்களுக்கு பெரும் நன்மைகள் உள்ளது

இலங்கைக்குள் பாகிஸ்தான் அகலக் கால் பதித்து விட்டது.பாகிஸ்தானின் பயங்கரவாதம் தமிழ்நாடு வரையும் புகுந்து விட்டது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தைக் குறிவைத்து முஸ்லிம் இளைஞர்களை கெடுக்க முயற்சிகள் செய்யலாம்.

முஸ்லிம் இளைஞர்களை பிழையான வழிகளில் இழுக்கப்படலாம்.ஈடுபடுத்தப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் இந்திய றோ அதிகாரிகள் தங்களது புலனாய்வு நடவடிக்கைகளால் இலங்கையின் பாதுகாப்புத் தரப்புக்கு தகவல் கொடுக்கலாம்.அதன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் பிழையான வழிகளில் செல்கின்றதை முளையிலேயே கிள்ளி எறியப்படலாம்.

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் பிழையான வழிகளில் செல்வதையே ஊக்குவிக்கலாம்.இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் உள்ளது என்பதை உலகுக்குக் காட்டுவதற்காக பொதுப்பலவும் அதன் கூட்டணிகளும் முஸ்லிம் இளைஞர்களை வலிந்து இழுக்கவும் சூழ்ச்சிகள் செய்து வருகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான சதிவலைகள்

உள்நாட்டில் முஸ்லிம்களை வலிந்து வம்புக்கு இழுப்பது மற்றது பாகிஸ்தானைக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களை தப்பான வழிகளிலும் இந்தியாவுக்கு எதிராகவும் பயன் படுத்தவும் பார்க்கலாம் இதுவொரு தி;ட்டமிடப்பட்ட சதியாகவே பார்க்கலாம்.பாகிஸ்தானைக் கொண்டு புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு செயற்பட்டு வெற்றி கண்டது.தற்போது பாகிஸ்தானைக் கொண்டு இலங்கை முஸ்லிம் இளைஞர்களைத் தப்பான வழிகளில் பயன்படுத்தப் பார்க்கலாம்.

குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்கள் அந்தச் சதிவலைகளில் இருந்து தப்பிக்க வேண்டும்.பொதுவாக இலங்கைக்குள் பாகிஸ்தானின் நுழைவு என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு எதிர்காலம் மிகவும் ஆபத்தான சவாலாகும் என்பதை எதிர்காலம் சொல்லும்.

முஸ்லிம் இளைஞர்கள் ஏதாவது தப்பான பாதையில் செல்வார்களேயானால் அல்லது ஏதாவது தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைக்க முயற்சி செய்வார்களேயானால் அது முழு இலங்கை வாழ் முஸ்லிம் இனத்திற்கும் பேரழிவாகும்.அதற்கு உலகில் முதலாவது கெரில்லா இயக்கமான புலிகள் நல்ல உதாரணமாகும்.

அப்படி ஏதாவது முஸ்லிம் இளைஞர்கள் முயற்சிகள் மேற் கொள்கின்றது தெரிய வருமேயானால் அவைகளை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் அமைப்புக்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் சமூக நலனில் நாட்டம் கொண்டவர்கள் இந்த விடயத்தில் அதிக கரிசனை காட்ட வேண்டும். அல்லாது போனால் முஸ்லிம் சமூகம் அதற்காக அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.

ஆனால் இலங்கை நாடாளுமன்றதில்முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் அடிக்கடி பூச்சாண்டி காட்டி முஸ்லிம் வாலிபர்களும் ஆயுதம் தூக்குவார்கள் என்று கொக்கரித்து கொம்பு சீவி வருவது பெருத்த நெருக்கடிக்குள் முஸ்லிம்களை கொண்டு சென்று விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசற்று முன்னர் கம்பஹாவில் இன்னுமொரு குண்டு வெடிப்பு
Next articleதன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப்! லீக் ஆன புகைப்படம் இதோ