இலங்கையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை உடன் மூடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் இரண்டு வாரங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எந்தவொரு விமானங்களையும் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த பெருமளவு இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை காரணமாக அரசாங்கம் கடும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பிரிவுடன் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் சுமார் 80 தொடருந்து சேவைகள் இன்று முதல் 19ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அரச மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறுகிய தூர தொடருந்துகளே இடைநிறுத்தப்பட்டுள்ளன.விடுமுறை நீடிக்கப்பட்டால் இந்த தொடருந்துகள் 23ஆம் திகதிவரை இடைநிறுத்தப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.