இந்த அறிகுறிகள் எவ்வளவு பெரிய பிரச்சனையின் தீவிரமானவை என்று தெரியுமா?

0

ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கிலான மக்கள் மேல் சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்றான சைனஸ் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். சைனஸ் தொற்றுகளின் போது, ஒருவரது சுவாசக் குழாய் வீக்கமடைந்து, அழற்சி ஏற்பட்டிருக்கும். பெரும்பாலும் சைனஸ் தொற்றுகளானது வைரஸ் தாக்குதலால் ஏற்படுவதாகும். இந்த வகை தொற்றுகள் தீவிரமாக அல்லது நீண்ட காலமாக இருக்கலாம். தீவிர சைனஸ் தொற்றுகளானது குறுகிய காலம் வரை நீடித்திருக்கும். அதுவே நீண்ட கால தொற்றுகளானது ஆறு முதல் எட்டு வாரத்திற்கும் அதிகமாக அல்லது அடிக்கடி ஏற்படும். சைனஸ் தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது சைனஸ் சுரப்பியை தீவிரமாக பாதித்து, காது தொற்றுகள், பார்வை இழப்பு அல்லது மூளைக்காய்ச்சலை கூட உண்டாக்கும்.

ஆகவே சைனஸ் தொற்றுகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்க வேண்டியது என்பது முக்கியம். ஆனால் பலருக்கும் தங்களுக்கு சைனஸ் தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்று சரியாக தெரியாமல், இறுதி கட்டத்தில் தான் மருத்துவரை சந்திக்கிறார்கள். இதற்கு காரணம் சைனஸ் தொற்றிற்கான சரியான அறிகுறிகள் தெரியாமல் இருப்பது தான்.

அதோடு சைனஸ் தொற்றிற்கான அறிகுறிகளை சாதாரண சளிக்கான அறிகுறிகளுடன் சேர்த்து குழப்பிக் கொள்வதும் ஓர் காரணமாகும். சைனஸ் தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் சளிக்கான அறிகுறிகள் என இரண்டும் ஒரே மாதிரி இருக்கும். அதில் மூக்கடைப்பு, லேசான காய்ச்சல், தொண்டை கரகரப்பு, மிகுதியான சோர்வு மற்றும் உடல்நலம் சரியில்லாதது போன்று உணர்வு இருக்கும். ஒருவருக்கு சாதாரண சளி என்றால், இதற்கான அறிகுறிகள் 3-5 நாட்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் ஒரு வாரத்திற்கும் மேல் ஒருவருக்கு சளி நீடித்திருந்தால், அவர்களுக்கு சைனஸ் தொற்றுகள் உள்ளது என்று அர்த்தம். இக்கட்டுரையில் சைனஸ் தொற்றிற்கான சில முக்கிய அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

முகத்தில் வலி சாதாரண சளிக்கும், சைனஸ் தொற்றிற்கும் உள்ள வேறுபாட்டை அறியும் ஒரு மிகச்சிறந்த வழி முகத்தில் வலியுடன், ஒருவித அழுத்தத்தை உணரக்கூடும். முக்கியமாக மூக்கைச் சுற்றிய பகுதிகளிலும், மேல் தாடை மற்றும் பற்கள், மற்றும் கண்களுக்கு இடையேயும் வலியை அனுபவிக்கக்கூடும். சைனஸ் சுரப்பிகளில் சளி தேங்குவதால் தான், முகத்தில் அழுத்தம் மற்றும் வலி ஏற்படுகிறது. சில சமயங்களில் சைனஸ் தொற்றுகள் தீவிரமாக இருக்கும் போது வலி இன்னும் கடுமையாக, தலையை சிறிது அசைத்தாலே வலியை சந்திக்கக்கூடும்.

மஞ்சள் அல்லது பச்சை நிற சளி மூக்கில் இருந்து அல்லது வாய் வழியாக வெளிவரும் சளியானது பச்சை, மஞ்சள் அல்லது இரத்தம் கலந்து வெளிவந்தால், அதுவும் சைனஸ் தொற்றுகளுக்கான மற்றொரு அறிகுறியாகும். ஏனெனில் சைனஸ் தொற்றுக்களை உண்டாக்கிய வைரஸ் தான் சளியின் நிறத்தை மாற்றுகிறது. மேலும் சளியானது கெட்டியாகவும், மூக்கில் இருந்து வெளியே வர முடியாமலும் இருந்தால், அது சைனஸ் தொற்றிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

இருமலின் போது சளி ஒருவருக்கு அடிக்கடி இருமல் வந்தாலும், அது சைனஸ் தொற்றிற்கான அறிகுறிகளுள் ஒன்று. ஆனால் பலருக்கும் இருமல் வருவதற்கு காரணம் இது தான் என்று தெரியாது. அதிலும் இருமலானது இரவு நேரத்தில் மிகவும் மோசமாக இருக்கும். ஏனெனில் மூக்கு பகுதியில் இருந்த சளியானது தூங்கும் போது, தொண்டைக்கு செல்லும் போது, அது இருமலைத் தூண்டிவிடுகிறது. இந்த வகையான இருமலால் சளி வெளிவரும். அதுவும் பாக்டீரியா அல்லது வைரஸ் நிறைந்த சளியை வெளியேற்றும்.

மூக்கடைப்பு அடிக்கடி ஏற்பட்டால், நாம் அதை சளி தொல்லை ஆரம்பித்து விட்டது என்று தான் நினைப்போம். ஆனால் மூக்கடைப்பு ஒருவருக்கு நீண்ட காலமாக நீடித்திருந்தால், உங்களுக்கு சைனஸ் தொற்றுகள் உள்ளது என்று அர்த்தம். இப்படி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சைனஸ் சுரப்பிகளில் உள்ள இரத்த நாளங்கள் அழற்சியுடன் இருப்பது தான். சைனஸ் சுரப்பியில் அழற்சி இருந்தால், மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். மேலும் ஒருவர் பேசும் போது மூக்கில் பேசுவது போன்றே இருக்கும்.

தலைவலி சைனஸ் தொற்றிற்கான பொதுவான அறிகுறிகளுள் ஒன்று தலைவலி. ஆனால் நிறைய பேர் தலைவலி வருவதற்கு டென்சன் தான் காரணம் என்று தவறாக நினைக்கிறார்கள். சைனஸ் தொற்றுகள் ஏற்பட்டால், மூச்சுக் குழாய் மற்றும் நெற்றியில் ஏதோ ஒரு பாரமான பொருளை வைத்தது போன்ற உணர்வை உண்டாக்கி, அசௌகரியத்தை ஏற்படுத்தி, தலைவலியை உண்டாக்கும். அதுவும் சைனஸ் தொற்றுகளால் தலைவலி ஏற்பட்டிருந்தால், குனிந்தால் மற்றும் காலையில் தூங்கி எழும் போது கடுமையான தலைவலி ஏற்படும். மேலும் திடீரென்று காலநிலை மாற்றமடைந்தால், அதாவது நீங்கள் வெப்பமான வெயிலில் சுற்றிவிட்டு, ஏசி நிறைந்த அறையில் நுழையும் போது இம்மாதிரியான தலைவலியை அனுபவிக்கக்கூடும்.

வாய் துர்நாற்றம் சைனஸ் தொற்று இருந்தால், அதை உணர்த்தும் அறிகுறிகளுள் ஒன்று வாய் துர்நாற்றம். தொண்டையின் பின்பகுதியில் தான் பாக்டீரியாக்களின் வீடு உள்ளது. சைனஸ் தொற்றுக்களின் போது, அதிகப்படியான சளி உற்பத்தி செய்யப்படுவதால், அந்த சளி தொண்டைப்பகுதியில் தேங்கும் போது, அந்த சளியில் பாக்டீரியாக்கள் விளையாடும் போது, கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. இந்த வகையான வாய் துர்நாற்றம் என்ன செய்தாலும் போகாது. ஆனால் சைனஸ் தொற்றுகள் நீங்கிவிட்டால், வாய் துர்நாற்றம் போய்விடும்

பல் வலி சொன்னால் நம்பமாட்டீர்கள், வாயின் மேல் பகுதியில் உள்ள பற்களில் வலியை உணர்ந்தால், அது சைனஸ் தொற்றுகளின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இந்த மாதிரியான வலியானது, பற்களில் உள்ள பிரச்சனையால் வராது. மாறாக சைனஸ் சுரப்பிகளில் சளியின் தேக்கத்தினால் கொடுக்கப்படும் அழுத்தத்தால் முகத்தின் பல்வேறு பகுதியில் வலியை சந்திக்கக்கூடும். முக்கியமாக தாங்க முடியாத பல் வலியை உண்டாக்கும். ஆகவே உங்களுக்கு நீண்ட நாட்களாக பல் வலி இருந்தால், உடனே மருத்துவரை அணுகி பிரச்சனையைக் கூறி, சரிசெய்ய முயலுங்கள்.

காது அடைப்பு மூக்கடைப்புடன், காதுகளிலும் அடைப்புக்கள் ஏற்பட்டால், அது சைனஸ் தொற்றிற்கான அறிகுறியாகும். உஙகள் காதுகளில் ஏதேனும் வித்தியாசமான சப்தத்தைக் கேட்பது போன்று நீங்கள் உணர்ந்தாலோ அல்லது லேசான காது வலியை உணந்தாலோ, உங்கள் சைனஸ் சுரப்பியில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி பிரச்சனையை சரிசெய்யுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதுவரை வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் உள்ளதா? பச்சை எலுமிச்சை இதோ!
Next articleஉடல் எடையை விரைவாக‌ குறைக்க தினமும் ஓட்ஸ் சாப்பிடலாமா? இல்லையா?