ஆடி மாத ராசிப்பலன்கள் 2019 : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது?

0

மேஷம்
எதிலும் முதலிடத்தை பிடிக்க விரும்புபவர்களே! முயற்சிகளிலிருந்து பின் வாங்காதவர்களே! முற்போக்குச் சிந்தனையால் சுற்றியிருப்பவர்களை கவர்பவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியாலும், சாதுர்யமான பேச்சாலும் சாதித்துக் காட்டுவீர்கள். தடைகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும்.

எதிர்பார்த்த தொகையும் கைக்கு வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.

புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ அப்ரூவலெல்லாம் கிடைக்கும். ஆகஸ்ட் 9ம் தேதி வரை ராசி நாதன் ராசிக்கு 4-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் உடன் பிறந்தோர் உறுதுணையாக இருப்பார்கள்.

சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். அயல் நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். அரைகுறையாக நின்று போன பல வேலைகளை இனி ஒவ்வொன்றாக முடிப்பீர்கள்.

உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் பகை வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். தந்தைவழி உறவினர்கள் வகையில் அலைச்சலும், மன உளைச்சலும் வந்துப் போகும்.

குருபகவானும் 8-ல் நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். பயணங்களும் அடுத்தடுத்து இருக்கும். தவிர்க்கமுடியாத செலவுகளும் அதிகமாகும். அரசியல் வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். அதிரடி லாபம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்களின் நிறைக் குறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். மேலதிகாரி உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்.

9ம் வீட்டில் கேதுவும், சனியும் அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். என்றாலும் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். கலைத்துறையினர்களே! அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே! மகசூல் அதிகரிப்பால் சந்தோஷம் நிலைக்கும். வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சாதுர்யமான பேச்சால் சாதித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள் : ஜூலை 18, 19, 20, 21, 28, 29, 31 மற்றும் ஆகஸ்ட் 3, 5, 6, 7, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 9.07மணி முதல் 9,10ம் தேதி வரை.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதுர்க்கை அம்மனை சென்று வணங்குங்கள்.

ரிஷபம்
போராடும் குணம் உடையவர்களே! கலைக்கண்ணோட்டத்துடன் எல்லாவற்றையும் காண்பவர்களே! பிரிந்து கிடப்பவர்களை ஒன்று திரட்டும் சக்தி உடையவர்களே! உங்களின் ராசி நாதனான சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைகளையும் தாண்டி நீங்கள் முன்னேறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உங்களுடைய தன-பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்ததையும் தந்து முடிப்பீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அவர்கள் அயல்நாடு சென்று உயர்கல்விப் பெற விசா கிடைக்கும். ஆகஸ்ட் 9ம் தேதி வரை ராசிக்கு 3ம் வீட்டில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் புத்துணர்ச்சி ததும்பும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கைமாற்றாக வாங்கியிருந்த கடனை பைசல் செய்வீர்கள். புது மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீண் அலைச்சல், எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

குருபகவான் 7-ம் வீட்டில் நிற்பதால் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த திருமணம் கூடி வரும். திடீர் பணவரவு உண்டு.

கணவன்- மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். சூரியன் 3-ல் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத உதவிகள் வி.ஐ.பிகளிலிடமிருந்து கிடைக்கும்.

என்றாலும் வாகனம் கொஞ்சம் பழுதாகும். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத வேலைகள் முடியும். மாணவர்களே! கல்யாணம், திருவிழா என்று அலையாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.

அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வந்துப் போகும்.

பங்குதாரர்களுடன் கொஞ்சம் போராட வேண்டி வரும். கடையை விரிவுபடுத்தி கட்ட வெளியில் கடன் வாங்குவீர்கள். ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். விவசாயிகளே! விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். மகசூலை அதிகப்படுத்த நவீனரக உரங்களை பயன்படுத்துவீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள் : ராசியான தேதிகள்: ஜூலை 20, 21, 22, 23, 24, 31 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 7, 9, 10, 17.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 11, 12, 13ம் தேதி காலை 11.40 மணி வரை.

பரிகாரம்: சஷ்டி திதி நடைபெறும் நாளில் முருகப் பெருமானை வணங்குங்கள்.

மிதுனம்
நெருக்கடி நேரத்திலும் பதட்டப்படாமல் பணியாற்றுபவர்களே! நகைச்சுவையாகப் பேசி சுற்றியிருப்பவர்களை கவர்பவர்களே! வித்தியாசமாக யோசித்து வெற்றி பெறுபவர்களே! ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் அடிமனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை விலகும். வீண் விவாதங்களையெல்லாம் தவிர்ப்பீர்கள்.

குடும்பத்திலே உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மருந்து, மாத்திரை குறையும். ஆரோக்யம் கூடும். ஆகஸ்ட் 09ம் தேதி வரை 2ல் செவ்வாய் நிற்பதால் சகோதரவகையில் உதவி கிடைக்கும். பங்காளிப் பிரச்னை தீர்வுக்கு வரும்.

சூரியன் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகி விட்டதால் கோபம் விலகும். வேலைச்சுமை குறையும். தள்ளிப் போன சில காரியங்கள் உடனே முடியும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனே முடியும். என்றாலும் சூரியன் 2ம் வீட்டில் அமர்வதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவீர்கள்.

குருபகவான் 6ல் மறைந்திருப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். வீண் பழிகளையும் சுமக்க வேண்டியிருக்கும். நெருங்கிப் பழகிய ஒரு சிலர் திடீரென்று பார்த்தும் பார்க்காமலும் செல்வார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

மகனுக்கு இருந்து வந்த கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். விருந்தினர், உறவினர் வருகையால் வீடு களைக்கட்டும்.

அரசியல்வாதிகளே! அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியை போராடி முடிப்பீர்கள். மாணவர்களே! விளையாட்டின் போது கவனம் தேவை. விரும்பிய பாடப்பிரிவில் சேர கொஞ்சம் போராட வேண்டியிருக்கும்.

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். கண்டகச்சனி நடைபெறுவதால் மற்றவர்களை நம்பி அனுபவமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.

வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். செங்கல், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு.

சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். மேலதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். மகசூலை அதிகபடுத்த நவீனரக உரங்களை பயன்படுத்துங்கள். இங்கிதமானப் பேச்சாலும், எதார்த்தமான முடிவுகளாலும் நினைத்ததை முடித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 23, 24, 25, 26 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 17.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 17, 18, 19ம் தேதி பிற்பகல் 3.10மணி வரை மற்றும் ஆகஸ்ட் 13ம் தேதி காலை 11.40 மணி முதல் 14,15ம் தேதி இரவு 10.21மணி வரை.

பரிகாரம்: ஏகாதசி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை வணங்குங்கள்.

கடகம்
தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர்களே! எல்லா செயல்களுக்கும் காரண காரியம் கற்பித்து பேசுபவர்களே! பகுத்தறிவால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை ஆட்சி செய்பவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன இறுக்கங்கள் குறையும். தைரியம் பிறக்கும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிய முனைவீர்கள்.

வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரனும் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். எதிலும் வெற்றி உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் முன்கோபத்தால் குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வந்து போகும். குருபகவான் 5ம் வீட்டில் நிற்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும்.

பூர்வீக சொத்து பங்கு கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆகஸ்ட் 9ம் தேதி வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும் அமர்ந்திருப்பதால் முன்கோபத்தால் கொஞ்சம் படபடத்துப் பேசுவீர்கள்.

அடுத்தடுத்து வேலைகள் இருந்துக் கொண்டே இருக்கும். காய்ச்சல், சளித் தொந்தரவு வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. கன்னிப்பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் நினைத்தது நிறைவேறும். மாணவர்களே! கூடா பழக்கம் விலகும். நினைவாற்றல் பெருகும். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

கடையை நவீனமயமாக்குவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்து கொள்வார்கள். அழகு சாதனப் பொருட்கள், உணவு, கெமிக்கல் வகைகளால் லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! பழைய மோட்டார் பம்பு செட்டை மாற்றுவீர்கள். நீர்பாசனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 18, 26, 27, 28, 29 மற்றும் ஆகஸ்ட் 3, 4, 5, 7, 11, 12, 14.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 19ம் தேதி பிற்பகல் 3.10 மணி முதல் 20, 21ம் தேதி வரை மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 10.21 மணி முதல் 16, 17ம் தேதி வரை.

பரிகாரம்: பிரதோஷ நாளில் ஸ்ரீசரபேஸ்வரரை சென்று வணங்குங்கள்.

சிம்மம்
மூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! தோல்விகளைக் கண்டு ஒருபோதும் துவளாதவர்களே! முதல் முயற்சியிலேயே எதையும் முடிக்க விரும்புபவர்களே! இந்த மாதம் முழுக்க சுக்கிரன் வலுவாக நிற்பதால் பழைய சொத்து விற்பதன் மூலமாகவோ, பாகப்பிரிவினை மூலமாகவோ பணம் வரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சிலர் பழைய நகையை மாற்றி புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். புதனும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். செல்வாக்குக் கூடும். வீடு கட்டுவதற்கு அனுமதிக் கிடைக்கும்.

உறவினர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஆகஸ்ட் 9ம் தேதி வரை செவ்வாயும் மறைந்திருப்பதால் வீண் செலவு, அவப்பெயர், ஏமாற்றம், வீண்பழி வந்து போகும். சொத்துப் பிரச்னைகளை கொஞ்சம் கவனமாக கையாளப்பாருங்கள்.

அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 12வது வீட்டில் மறைந்து நிற்பதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். டென்ஷனாவீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். குருபகவான் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் ஓரளவு பணவரவு அதிகரிக்கும்.

தடைகள் நீங்கும். புது முயற்சிகளும் பலிதமாகும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள்.

மாணவர்களே! போராடி சில பாடங்களில் வெற்றி பெறுவீர்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.

இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

மரவகைகள், பெட்ரோல் பங்க், ஹோட்டல் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் சிறுசிறு ஏமாற்றம், டென்ஷன் வந்துச் செல்லும்.

எதிர்பார்த்த சலுகைகள் சற்று தாமதமாகும். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் உயரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! நிலப் பிரச்னைகளை பெரிது படுத்தாமல் சுமுகமாக பேசித் தீர்ப்பது நல்லது. விளைச்சல் பெருகும். நாவடக்கமும், எச்சரிக்கை உணர்வும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் ஆகஸ்ட் 5, 6, 7, 8, 14, 15.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 22, 23, 24ம் தேதி பிற்பகல் 1.45 மணி வரை.

பரிகாரம்: அஷ்டமி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீகால பைரவரை சென்று வணங்குங்கள்.

கன்னி
சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களை காயப்படுத்தாத நீங்கள் அன்புக்கு அடிமையாவீர்கள். போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருப்பீர்கள். உங்களுடைய ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தன்னம்பிக்கை துளிர்விடும்.

மருந்து, மாத்திரை அளவு குறையும். அழகு, இளமை கூடும். வாடியிருந்த முகம் மலரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

வாகனம் வாங்குவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவதற்கான யோகமும் கூடி வரும். ஆகஸ்ட் 9ம் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் உடன்பிறந்தவர்களுடனான மனக்கசப்புகள் விலகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும்.

பூர்வீகச்சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். விலையுயர்ந்த துணிமணி, நகைகளை வாங்குவீர்கள். லாப வீட்டில் சூரியனும் நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும்.

பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். ஆனால் 3ல் குரு நிற்பதால் உங்களால் பயனடைந்தவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுதல் போன்றவை நிகழும். ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாணவர்களே! கூடாப் பழக்கம் விலகும். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். கடையை விரிவுபடுத்துவது குறித்து நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசிப்பீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ஷேர், ஸ்பெகுலேஷன், மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

சக ஊழியர்களை அன்பால் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். விவசாயிகளே! உங்களின் கோரிக்கைகள் பூர்த்தியாகும். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். புதிய முயற்சியில் தீவிரம் காட்டி வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 20, 21, 22, 23, 30, 31

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 24ம் தேதி பிற்பகல் 1.45மணி முதல் 25,26ம் இரவு 10.32 மணி வரை.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஸ்ரீஜயப்பனை சென்று வணங்குங்கள்.

துலாம்
துவண்டு போய் வருபவர்களின் சுமை தாங்கிகளே! பனி, மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்களே! உள்ளத்தில் அழுதாலும், உதட்டால் சிரிப்பவர்களே! ராசிநாதன் சுக்கிரன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும். தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். காது, தொண்டை வலி நீங்கும். வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

வாகனத்தை சீர் செய்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்குக் கூடும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் வர வேண்டிய தொகையும் வரும்.

பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும். பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடியும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். ஆகஸ்ட் 09ம் தேதி வரை ராசிக்கு 10ம் வீட்டில் செவ்வாய் தொடர்வதால் எதிலும் வெற்றியே கிட்டும். புகழ், செல்வாக்கு கூடும். உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்.

சூரியன் 10 ம் வீட்டில் நிற்பதால் புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளை சந்திப்பீர்கள். வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.

மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் தன தான்ய சம்பத்து அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். செல்வாக்கு உயரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வி சிறக்கும்.

மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல், தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

வாடிக்கையாளர்களின் மணங்கோணாமல் நடந்து கொள்ளுங்கள் ஏற்றுமதி, பிளாஸ்டிக், தானியம் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும்.

உங்களை எப்பொழுதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் இனி வலிய வந்து நட்புறவாடுவார்கள். கலைத்துறையினர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். விவசாயிகளே! வண்டு பூச்சித் தொல்லை வந்து போகும். எதிர் நீச்சல் போட்டு இலக்கை எட்டுப் பிடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 18, 22, 23, 24, 25, மற்றும் ஆகஸ்ட் 1, 2, 3, 9, 10, 11, 12, 14.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 26ம் தேதி இரவு 10.32 மணி முதல் 27, 28ம் தேதி வரை.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் அல்லது கிருத்திகை நட்சத்திர நாளில் ஸ்ரீமுருகப் பெருமானை சென்று வணங்குங்கள்.

விருச்சிகம்
விழுவதெல்லாம் எழுவதற்கே என நினைப்பவர்களே! இதயத்திலிருந்து பேசுபவர்களே! எதிலும் நடுநிலைத் தவறாதவர்களே! மற்றவர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி திருத்துபவர்களே! உங்களுக்கு சாதகமாக புதனும், சுக்கிரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினையெல்லாம் மாற்றுவீர்கள்.

வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

மனைவி வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 9ல் சூரியன் நிற்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். சேமிப்புகளும் சொஞ்சம் கரையும்.

குருபகவான் ராசிக்குள்ளேயே நிற்பதால் ஆரோக்யம் பாதிக்கும். தலை வலி, அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை, செரிமானக் கோளாறு போன்றவை வந்து நீங்கும். செவ்வாய் ஓரளவு சாதகமாக இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.

கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று கலங்குவீர்கள். அரசியல்வாதிகளே! மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள்.

மாணவர்களே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுக் கிளைகள் தொடங்குவார்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். பால், குளிர்பானங்கள், பேக்கரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். சூரியன் 9ல் நிற்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். இடம் மாற்றம் வரும்.

சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களை விமர்சித்துப்பேச வேண்டாம்.கலைத்துறையினர்களே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 18, 19, 20, 21, 25, 26, 28 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 4, 5, 12, 14, 17.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 29, 30, 31ம் தேதி காலை 9.08 மணி வரை.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஸ்ரீசீரடிசாய்பாபாவை சென்று வணங்குங்கள்.

தனுசு
காலச்சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொள்பவர்களே! அழுத்தமான கொள்கையாலும், ஆழமான பேச்சாலும் அடுத்தவர்கள் மனதில் இடம்பிடிப்பவர்களே! புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும்.

செல்வாக்குக் கூடும். வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வேலைக்கு விண்ணப்பித் திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். ஆகஸ்ட் 09ம் தேதி வரை 8ல் செவ்வாய் நிற்பதால் டென்ஷன், செலவு, விபத்து வந்து நீங்கும்.

சகோதர, சகோதரிகள் உங்களை புரிந்துகொள்ளாமல் சண்டைக்கு வருவார்கள். சூரியனும் 8ல் மறைந்து நிற்பதால் பயணங்கள் தொடரும். தந்தையாருக்கு அலைச்சல் இருக்கும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். குருபகவான் 12ம் வீட்டில் மறைந்து

கிடப்பதால் அலைச்சல்கள், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வாகனப் பராமரிப்புச் செலவு கூடும்.

அரசியல் வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆதரவு கிட்டும். ஹார்மோன் கோளாறு, காது வலி வந்து நீங்கும். மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். ரியல் எஸ்டேட், இரும்பு, சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள்.

கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். பக்கத்து நிலத்துக்காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். முற்பகுதியில் தடுமாறினாலும் பிற்பகுதியில் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 18, 19, 20, 28, 29, 30 மற்றும் ஆகஸ்ட் 5, 6, 7, 14, 15, 16.

சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 31ம் தேதி காலை 09.08மணி முதல் ஆகஸ்ட் 1,2ம் தேதி நண்பகல் 12.02மணி வரை.

பரிகாரம்: சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீவிநாயகப் பெருமானை சென்று வணங்குங்கள்.

மகரம்
எங்கும் எப்போதும் உண்மையையும், யதார்த்தத்தையும் விரும்பும் நீங்கள் பரந்த மனதுக்கு சொந்தக்காரர்கள். யாரையும் பகைத்துக் கொள்வதை விரும்பாத நீங்கள் அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களை எப்படிக் கேட்டாலும் சொல்ல மாட்டீர்கள். குரு லாப வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கல்வியாளர்கள், அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆனால் 23ம் தேதி வரை சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் அலைச்சல், செலவினங்கள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்ன சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். 24ம் தேதி முதல் சுக்கிரன் சாதகமாவதால் மனைவியின் ஆரோக்யம் சீராகும். வீடு கட்டுவதற்கு அனுமதியும் கிடைக்கும். பழுதான மின்சார சாதனங்கள், செல்போனை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

03ம் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேலை கிடைக்கும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.

அவர்வழி உறவினர்களிடம் பகைமை வெடிக்கும். பிராத்தனைகளை நிறைவேற்ற குடும்பத்துடன் ஆன்மீகப்பயணம் சென்று வருவீர்கள். 7ல் சூரியன் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் கோபப்படாதீர்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும்.

மனைவிவழியில் அலைச்சல், செலவு இருக்கும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள்.

கன்னிப் பெண்களே! திறமையான வகையில் செயல்படுவீர்கள். மாணவர்களே! விளையாட்டு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள்.

புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாகன உதிரி பாகங்கள், கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

மேலதிகாரி அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினர்களே! சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். விவசாயிகளே! மகசூல் இரட்டிப்பாகும். மீதிப்பணம் தந்து பக்கத்து நிலத்தை கிரயம் செய்வீர்கள். வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதை உணரும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 20, 21, 22, 23, 24, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 7, 9, 10, 17.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 2ம் தேதி நண்பகல் 12.02 மணி முதல் 3, 4ம் தேதி பிற்பகல் 2.22மணி வரை.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை சென்று வணங்குங்கள்.

கும்பம்
கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே! விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம் என எதிலும் மிதமாக இருப்பவர்களே! 23ம் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், சமையலறை சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். பெற்றோரின் உடல் நிலையும் சீராகும்.

ஆனால் 24ம் தேதி முதல் சுக்கிரன் 6ம் வீட்டில் சென்று மறைவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். 03ம் தேதி முதல் புதன் 6ல் மறைவதால் நண்பர்கள், உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகமாகும்.

பழைய நண்பருடன் மனஸ்தாபம் வரக்கூடும். ஆகஸ்ட் 09ம் தேதி வரை ராசிக்கு 6ம் வீட்டில் செவ்வாய் வலுவாக இருப்பதால் உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.

பழைய கடன் தீரும். வெளிவட்டாரம் பரபரப்புடன் காணப்படும். 5ம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உங்களை அலைகழித்த சூரியன் இப்போது 6ம் வீட்டில் நுழைந்திருப்பதால் கோபம் குறையும். பயம் விலகும். அரைகுறையாக நின்ற பல காரியங்கள் உடனே முடியும்.

அரசால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும். ராசிக்கு 10ல் குரு நிற்பதால் உங்களுடைய பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். உங்கள் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள்.

வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசுவதை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! மனதை அலைபாயவிடாமல் ஒருநிலைப் படுத்துங்கள். பழைய தோழிகள் உதவுவார்கள். மாணவர்களே! அவ்வப்போது மறதி, மந்தம் வந்து விலகும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள்.

முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடிப் பெறுவீர்கள். அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் ஏதேனும் குறை கூறுவார்கள். உத்யோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்கு புரியவில்லையே என வருந்துவீர்கள். சக ஊழியர்களால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். கிசுகிசுத் தொந்தரவுகளும் வரக்கூடும். விவசாயிகளே! வாய்க்கால் வரப்புச் சண்டை வந்து நீங்கும். காய்கறி, பயிறு வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வெற்றியின் விளிம்பை தொடும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 23, 24, 25, 26, 28, 31 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 4ம் தேதி பிற்பகல் 2.22 மணி முதல் 5, 6ம் தேதி மாலை 5.07 மணி வரை.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீஆஞ்சநேயரை சென்று வணங்குங்கள்.

மீனம்
தர்மத்திற்கு தலை வணங்குபவர்களே! தவறு செய்பவர்களை தயங்காமல் தண்டிப்பவர்களே! ரசிப்புத் தன்மை அதிகம் கொண்ட நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் சாதிக்க வேண்டுமென நினைப்பீர்கள்.

புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள்.

உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்தி சிலர் உங்களை பகடைக் காயாக உருட்டினார்களே! இனி உங்களுடைய பலவீனங்களை நீங்களே சரி செய்து கொள்வீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்.

சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். சமையலறையை நவீனப்படுத்துவீர்கள். ஆகஸ்ட் 09ம் தேதி வரை 5ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் மன உளைச்சல், டென்ஷன், வீண் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும். சூரியன் 5ல் நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து கவலைப்படுவீர்கள்.

சொந்த ஊரில் பொது விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். சொத்துப் பிரச்னைகளை உணர்ச்சிப்பூர்வமாக அணுக வேண்டாம். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

மாணவர்களே! கொஞ்சம் செலவு செய்து போராடி நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும்.

வேலையாட்கள் மதிப்பார்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருவார்கள். பங்குதாரர்களை விட்டுப் பிடியுங்கள். கடையை விரிவுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள். புரோக்கரேஜ், ஹோட்டல், எலட்ரானிக்ஸ் சாதனங்களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விவசாயிகளே! சொத்துப் பிரச்னைகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். அதிரடி முடிவுகளால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஜூலை 18, 20, 25, 26, 28 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13, 14, 17.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 6ம் தேதி மாலை 5.07மணி முதல் 7,8ம் தேதி இரவு 9.07மணி வரை.

பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்குங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறிய அரிய விளக்கம் !
Next articleதர்ஷன் திருமணம் செய்வது யாரை? பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர் !