மலச்சிக்கல் குணமாக இத்திக்காய்களை தண்ணீரில் காய்ச்சி இப்படி குடிங்க!

0

இத்தி என்றும் குருக்கத்தி என்றும் அழைக்கப்படும் மரம், ஐம்பது அடி உயரம் வரை வளர்ந்து, குடை போல பரந்து விரிந்த கிளைகளுடன், நெருக்கமான பசுமை வண்ண இலைகளைக் கொண்டு, நிழல் தரும் கனி மரமாகும். இளைப்பாற நிழலும், புசிக்க கனிகளும் தரும் இத்தி, தொன்மையான மரங்களில் ஒன்று.

தமிழகத்தின் அநேக இடங்களில் காணப்படும் இத்தி மரங்கள், வட மாநிலங்களில் அதிக இடங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகின்றன. குடகு மலைப்பகுதிகளில் உள்ள காபிச் செடிகளுக்கு நிழல் தரும் மரங்களாகவும், வளர்க்கப்படுகின்றன.

ஆல மரத்தின் இலைகளைப் போன்ற நீண்ட இலைகளைக் கொண்ட மரங்களின் கிளைகளில், அத்திப்பழங்கள் போன்ற சிறிய பழங்கள் கொத்துக்கொத்தாக கனிந்து காணப்படும். இந்த மரங்களின் இலைகள், வேர்கள், மரப்பட்டை, காய்கள் மற்றும் கனிகள் மருத்துவ பலன்கள் மிக்கவை. மரத்தின் பட்டைகளைக் கீற, பால் சுரக்கும்.

இத்தி மரங்களில் கல் இத்தி மற்றும் பாறை இடுக்குகளில் வளரும் காட்டு இத்தி என்று சில வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை, திருக்கோவில்களில் குருக்கத்தி என்று அழைக்கப்படும் தல மரமாக திகழ்கின்றன.

கல் இத்தி மரம், வேர்களைக் கொண்டு பிற மரங்களின் கிளைகளைப் பற்றி, அதன் மூலம் நன்கு வளர்ந்து, வேர்கள் தரையை அடைந்ததும், வேர்களின் சத்துக்கள் மூலம், கனிகள் செழுமை பெறும், வேர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, வேர்கள், வளரும் மரங்களின் தண்டுகளை சுற்றிப் படர்ந்து, அவற்றின் சக்தியைக் கிரகித்து, அந்த மரங்களை பட்டுப் போகச்செய்து, தாம் செழித்து வளரும் தன்மை மிக்கவை.

இத்தி மற்றும் கல் அத்தி மரங்களின் மருத்துவ பலன்கள் :
இத்தி மரங்களின் பொதுவான மருத்துவப் பலன்கள், உடல் சூடு தணித்து, குளிர்ச்சி உண்டாக்கும், காயங்கள் மற்றும் உடல் உள் உறுப்புகளின் இரணங்களை ஆற்றும், மலச்சிக்கல் பாதிப்புகளை விலக்கும்.

பெண்களின் மாத விலக்கு மற்றும் உடல் கோளாறுகளை சரிசெய்யும் தன்மைகள் மிக்கது. உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப் போக்கு, உடல் எரிச்சல் பாதிப்புகளை சரி செய்யும். இரத்த பாதிப்புகளை விலக்கி, இரத்த சோகை போக்கும். உடலில் பித்த கப குறைபாடுகளை சீர் செய்யும்.

மலச்சிக்கல் போக்கும் இத்திக்காய்கள்:
இத்திக்காய்களை சேகரித்து, அவற்றை நன்கு அலசி, இலேசாக கீறி, எண்ணை கத்தரிக்காய் போல, நெய்யில் இட்டு வதக்கி, சாப்பாட்டில் கலந்து சாப்பிட, மலச்சிக்கல் பாதிப்புகள் விலகி, உடல் நலம் பெறும்.

மலம் முழுமையாக கழிக்க முடியாமல், பாதிப்பு உள்ளவர்கள், சிறிது இத்திக்காய்களை எடுத்து, தண்ணீரில் காய்ச்சி, நன்கு சுண்டி வந்ததும், அந்த நீரை வடிகட்டி பருகி வர, மலம் இளகி வெளியேறி, உடல் நலமாகும்.

உடல் உள் உறுப்புகளின் இரணம் ஆற்றும் :
பிஞ்சாக உள்ள இத்திக்காய்களை, மென்று சாப்பிட, வயிறு மற்றும் உள்ளுருப்புப் புண்கள் ஆறும்.

வயிற்றுப் போக்கை குணமாக்கும் :
உடலில் ஏற்படும் அளவுகடந்த சூடு மற்றும் கிருமிகளின் பாதிப்புகள் காரணமாக சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். இதற்கு, இத்தி மரப்பட்டைகளை நீரிலிட்டு நன்கு காய்ச்சி, அந்த நீரை பாதிப்பு உள்ள நாட்களில் மூன்று வேளை பருகி வர, பேதி மற்றும் வயிற்றுப்போக்கு நின்று, உடல் நலம் மேம்படும்.

மேலும், பிஞ்சு இத்திக் காய்களை மென்று சாப்பிட்டு வந்தாலும், வயிற்றுப் போக்கு பாதிப்புகள் குணமாகும்.

அதிக இரத்தப் போக்கைக் குணமாக்கும் :
அதிக இரத்தப் போக்கு காரணமாக, பெண்களின் உடலில் இரத்த அளவு குறைந்து, இரத்த சோகை பாதிப்பு ஏற்பட்டு, உடல் வெளுத்து காணப்படும்.

இந்த பாதிப்புகளை சரி செய்ய, இத்தி மரப்பட்டைகளை, சிறிது நீரில் இட்டு, கொதிக்க வைத்து, நன்கு சுண்டி வந்ததும், அந்த நீரைப்பருகி வர, அதிக இரத்தம் வெளியேறிய நிலை மாறி, பெண்கள் நிம்மதி அடைவார்கள்.

காயங்கள் மற்றும் சிரங்குகளை குணமாக்கும்:
சித்த மருத்துவத்தைப்போலவே, ஆயுர்வேத மருத்துவமும், உடல் பாதிப்புகளை தீர்க்கும் செயல்முறைகளில் சில ஒற்றுமைகளைக் கொண்டிருக்கும், அதுபோல ஒரு மருந்துதான், ஆயுர்வேதத்தில் நால்பா மரம் எனும் நான்கு பால் மரப்பட்டை மருந்து.

ஆல மரம், அரச மரம், அத்தி மரம் மற்றும் இத்தி மரம் இவை நான்கும் மிகவும் தொன்மையான மரங்கள் மட்டுமன்றி, இவற்றின் பொதுவான ஒற்றுமையாக மரப்பட்டைகள், பால் வடியும் தன்மை மிக்கவை.

இந்த நான்கு மரங்களின் மரப்பட்டைகளை சேகரித்து அவற்றை சிறிது நீரில் இட்டு நன்கு காய்ச்சி, அந்த நீரை, உடலில் உள்ள ஆறாத காயங்கள் மற்றும் சீழ் வடியும் நிலையில் உள்ள புண்கள் மற்றும் சிரங்குகள் மேல் ஊற்றி , காயங்களை அந்த நீரால் அணங்கு அலசி வர, சில நாட்களில், காயங்கள் மற்றும் சிரங்குகள் மறைந்து, சருமம் இயல்பாக மாறிவிடும்.

நான்கு மரப் பட்டைகளை நிழலில் உலர்த்தி, தூளாக்கி, அந்தத்தூளை, சிரங்குகள் மற்றும் காயங்கள் மேல், தடவி வர, இந்தத் தூள், காயங்கள் மற்றும் சிரங்குகள் புரையோடிப் போகாமல், நச்சுக்கிருமி தோற்று ஏற்படாமல் காத்து, காயங்களை விரைவில் குணமாக வைக்கும்.

சரும வீக்கம் மற்றும் அரிப்பு பாதிப்புகளை போக்கும் :
இத்தி மரப் பட்டைகளை தூளாக்கி, அந்தத் தூளை தேங்காய் எண்ணையில் குழைத்து, உடலில் வீக்கம், சரும அரிப்பு மற்றும் காயங்களின் மேல் தடவி வர, பாதிப்புகள் விரைவில் நீங்கி விடும்.

வாய்ப்புண் போக்கும் இத்தி :
நன்கு காய்ச்சிய இத்தி மரப்பட்டை நீரை, வாயில் இட்டு கொப்புளித்து வர, வாய்ப்புண் நீங்கும். சிலர் உடலில் உள்ள சத்து குறைபாட்டால், தலைசுற்றல் ஏற்பட்டு, மயங்கி விழுந்து, விடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், இத்தி மரப் பட்டை குடிநீரை அவர்களைப் பருக வைக்க, விரைவில் மூர்ச்சை தெளிந்து, இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.

உடல் எரிச்சல் பாதிப்புகள் விலக :
இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதால் சிலருக்கு, உடல் சூடு அதிகரித்து, உடலில் எரிச்சல் ஏற்படும். மிக்க மனச் சோர்வை ஏற்படுத்தும் இந்த பாதிப்புகளை விலக்க, இத்தி மரப்பட்டைக் குடிநீரை, தினமும் இருவேளை பருகி வர, எரிச்சல் பாதிப்புகள் உடலில் இருந்து விலகி விடும்.

வாய் துர்நாற்றம் மற்றும் தொண்டை வலி போக்கும் இத்தி மருந்துகள் :
சிலருக்கு வாயில் துர்நாற்றம் வீசி, அவர்கள் வாயைத் திறந்து பேசவே அஞ்சுவர், சிலருக்கு நாவில் சுவையின்மை பாதிப்புகள் ஏற்பட்டு உணவில் வெறுப்பு ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகள் விலகி உடல் நலமும் மன நலமும் மேம்பட, இத்தி உதவும்.

ஆல், அரசு, அத்தி, இத்தி எனும் நான்குபால் மரப்பட்டைகளுடன், கருவேலம் பட்டை மற்றும் தோதகத்தி பட்டைகளை சம அளவில் சிறிது எடுத்துக்கொண்டு, அவற்றை ஒரு லிட்டர் நீரில் சேர்த்து, காய்ச்சி, நீர் சுண்டியதும், இதமான சூட்டில் அந்த நீரைக்கொண்டு தினமும் இருவேளை வாய் கொப்புளித்து வர, வாய் துர்நாற்றம் விலகும். தொண்டைப்புண் மற்றும் சுவாச பாதிப்புகளும் விலகி விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் ஆன்மா நீங்கள் இறந்த பிறகு அடுத்த பிறவி எடுக்க பூமியில் எவ்வளவு காலம் காத்திருக்கும் தெரியுமா?
Next articleஒரு காலத்தில் அஜித், கமல் என்று நடித்த கிரண் இப்போது எப்படியுள்ளார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படம் !