சென்னையில் சொத்தை எழுதி கேட்டதால் மனைவியை ஆடிட்டர் ஒருவர் அடித்துக் கொலை செய்தது மட்டுமின்றி, அதனை மறைக்க நகை கொள்ளை போனதாக நாடகம் ஆடிய ஆடிட்டரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்தவர் அண்ணாமலை. மத்திய தணிக்கை துறையில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மகள் கவிதா சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வர, 17 வயது மகன் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதன் கிழமை இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கவிதா தனது தாய் மகேஸ்வரி தலையில் ரத்தக் காயங்களுடன் படுக்கை அறையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
தனது தந்தைக்கும் தகவல் தெரிவிக்க அவரும் வந்து பார்த்து கே.கே.நகர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அண்ணாமலை கே.கே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு, பீரோவில் இருந்த 16 சவரன் நகைகளையும் யாரோ கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டார்.
இது ஆதாயக் கொலையாக இருக்கலாம் என விசாரித்த பொலிசாருக்கு ஆரம்பத்திலேயே சந்தேகம் ஏற்பட்டது. கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமெரா காட்சிகளில் சந்தேக நபர்கள் யாரும் தென்படவில்லை.
அதே போல வீட்டில் பீரோ உள்ளிட்ட இடங்களிலும் புதிய நபர்களின் கை ரேகை பதிவாகவில்லை. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்க அண்ணாமலை பதில் சொல்வதில் தடுமாறியுள்ளார். அவரிடம் துருவித் துருவி விசாரிக்க தனது மனைவியை தானே அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
ஆடிட்டர் அண்ணாமலையின் முதல் மனைவி விவாகரத்து பெற்றுவிட 1989-ல் இரண்டாவதாக மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் தனியாக அலுவலகம் தொடங்கி ஆடிட்டர் பணியை செய்து வருகிறார். சொந்தமாக ஒரு வீடு மட்டும் உள்ள நிலையில் தனது உறவினர்கள் போல் கார், தனி வீடு என ஆடம்பரமாக வாழ முடிவதில்லை என அண்ணாமலையுடன், மகேஸ்வரி சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் சமையல் எதுவும் செய்யாததால் மகேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலையும், கவிதாவும் மகேஸ்வரியை வீட்டின் வெளியே தள்ளி கதவை தாழிட்டு சண்டை போட்டுள்ளனர்.
இதனால் அவமானபடுத்தப்பட்டதாக உணர்ந்த மகேஸ்வரி, வீட்டை தனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என சண்டை போட்டுள்ளார். இந்த நிலையில் புதன் கிழமையன்று மகள் கவிதா வீட்டில் இல்லாத போது அண்ணாமலைக்கும், மகேஸ்வரிக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது.
தனது சட்டையை பிடித்ததால் ஆத்திரம் முற்றிய ஆடிட்டர் அண்ணாமலை தனது மனைவியின் 2 கைகளையும் குலவிக் கல்லை கொண்டு நசுக்கிக் கொடுமை செய்துள்ளார். பருப்பு கடையும் மத்தால் தலையில் தாக்கியுள்ளார். அவர் உயிரிழந்ததால் கொலையை மறைக்க வீட்டில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று தனது அலுவலகத்தில் வைத்து விட்டு நாடகமாடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து ஆடிட்டர் அண்ணாமலையை கைது செய்த சார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.