ரஷியாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது, பயிற்சியாளரின் கட்டுப்பாட்டை மீறிய சிங்கம், பார்வையாளர்கள் நின்றிருந்த இடத்தின் மீது திடீரென பாய்ந்து 4 வயது சிறுமியை கடித்துக் குதறியது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் தெற்குப்பகுதியில் கிராஸ்நோடார் மண்டலம் உள்ளது. இங்குள்ள உஸ்பென்ஸ்கோ கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, சர்க்கஸ் நிகழ்ச்சியில் பல்வேறு வகையான மிருகங்களை சாகசங்களைச் செய்யவைத்து பார்வையாளர்களை மிருகங்களின் பயிற்சியாளர்கள் மகிழ்வித்தனர். அப்போது ஒரு சிங்கத்தை பல்வேறு சாகசங்களை அதன் பயிற்சியாளர் செய்ய வைத்தார்.
.சிங்கம் சாகசம் செய்த கூண்டு அருகே, பார்வையாளர்கள் நின்று கொண்டு அந்த சாகசத்தை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, பயிற்சியாளரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் சிங்கம் முரண்டு செய்தது. அப்போது சிங்கத்தை பயிற்சியாளர் மிரட்டியபோது, அவரின் கட்டுப்பாட்டை மீறி திடீரென பார்வையாளர்கள் நின்றிருந்த பகுதி மீது சிங்கம் பாய்ந்தது.
அப்போது கூண்டுக்கு அருகே நின்றிருந்த 4வயது சிறுமியை பிடித்து இழுத்த சிங்கம் அந்தச் சிறுமியை விடவில்லை. சிங்கம் திடீரென தாவி தாக்கியதை எதிர்பாராத பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.
அதன்பின் சிங்கத்தின் பயிற்சியாளரும், சிறுமிக்கு அருகே இருந்தவர்களும் சிங்கத்தின் பிடியில் இருந்து சிறுமியை படுகாயங்களுடன் மீட்டனர். உடனடியாகஅந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து கிராஸ்நோடார் நகர போலீஸார் சர்க்கஸ் நடத்திய மாஸ்கோ பிக் சர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி எட்வார்ட் ஜபாஸ்னி, சிங்கத்தின் பயிற்சியாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சர்க்கஸ் நிகழ்ச்சியை பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் நடத்தியது, பார்வையாளர்கள் அமரும் பகுதிக்கும், விலங்குகளை வைத்து சாகசம் செய்த பகுதிக்கும் இடையே கடைப்பிடிக்கப்படும் இடைவெளியே பராமரிக்காமல் விதிமுறை மீறலில் ஈடுபட்டது ஆகியபிரிவுகளின் கீழ் கிரிமினல்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்றபோதிலும் முகத்திலும், உடலிலும் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. வாழ்நாள் முழுவதும் இனிமேல் சிங்கத்தின் கடியால் பட்ட காயங்களும்,தழும்புகளும் மாறாத அளவுக்கு முகம் சிதைந்துவிட்டது என்று தெரிவித்தனர்.
ரஷியாவில் சர்க்கஸ் நடத்தும்போதுமிருகங்கள் பார்வையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் தொடர்ந்து நட்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு சைபிரியாவில் சிறுத்தை ஒன்று கூண்டில் இருந்து அழைத்துவரும்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு பெண்ணை தாக்கியது, 2012-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது, சிறுத்தைப்புலி ஒன்று 7வயது சிறுவனை தாக்கியது குறிப்பிடத்தக்கது.