புதுச்சேரியில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக கிடந்த நபரைப் பற்றி பொலிசார் நடத்திய விசாரணையில், அந்த நபரை அவரின் மனைவி தன் அக்காவின் உதவியோடு அவரை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு வினோபா தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். 35 வயதான இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் புதுச்சேரி 100 அடி ரோட்டின் அருகில் இருக்கும் கழிவுநீர் வாய்க்காலின் சாக்குமூட்டையில் கமலக்கண்ணன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதனால் பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போது, பிரேதபரிசோதனையில், கமலக்கண்ணன் கழுத்து நெரித்தும் , மூச்சு தினறியும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் கமலக்கண்ணனின் மனைவி ஸ்டெல்லா மீது சந்தேகம் எழுந்துள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
இதனால் செல்போனில் நான் யாரிடம் பேசினாலும் சந்தேகப்பட்டு அடித்து சித்ரவதை செய்து வந்தார். அதனால் கோவித்து கொண்டு பிள்ளை சாவடியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கணவர் பிள்ளைச்சாவடி வந்தும் என்னை துன்புறுத்தியதால், அக்காவுடன் சேர்ந்து நான் எனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறினார் .
இந்நிலையில் பிள்ளை சாவடியில் உள்ள எனது அக்கா ரெஜினாவின் வீட்டில் வைத்து எனது கணவருக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாகவும், மயங்கி விழுந்த அவரை பெரியார் நகரில் உள்ள எங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து அடைத்து வைத்தும் அவர் இறக்கவில்லை என்று அக்கா ரெஜினாவிடம் கூறியுள்ளார்.
அக்கா அவரது ஆண் நண்பரான ரவுடி தமிழ்மணியை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்ததாகவும் கூறிய ஸ்டெல்லா, பின்னர் வீட்டில் வைத்து நானும் அக்காவும், எனது கணவரின் இருகைகளை பிடித்துக்கொண்டோம். தமிழ்மணி அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
பின்னர் 5-ஆம் திகதி நள்ளிரவு தமிழ்மணி அவரது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து கணவரின் உடலை சாக்குமூட்டையில் கட்டி ஸ்கூட்டரில் கொண்டு சென்று போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வீசி உள்ளார்.
அதன் பின் ஸ்டெல்லா அவரது அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.