வவுனியாவில் இருவேறு பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் போதைப் பொருளை தமது உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரும், ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்னி புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது தோணிக்கல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் 40 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா சுற்றுவட்ட வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மரக்காரம்பளை மதுபான நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரி ஒருவரது உடமையில் 70 மில்லி கிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.