சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள டாஸ்மாக் பார்களில் மாலை நேரங்களில் சில திருநங்கைகள்,நல்ல அலங்காரமான தோற்றத்தில் வந்து தலையில் கைவைத்து ஆசிர்வாதம் செய்வார்கள் கவனிச்சிருக்கீங்களா?
குடிக்க வந்திருப்பவர்களும் மாற்று கருத்து சொல்லாமல் பத்து ரூபாய் அல்லது அவர்களால் முடிந்ததைக் கொடுத்து அனுப்புவார்கள்.இன்னும் சில இடங்களில் சில திருநங்கைகள் கூட்டமாக வந்து கடைகளில் கைதட்டி காசு கேட்பார்கள்,கொடுத்தால் ஆசிர்வாதம் கிடைக்கும், கொடுக்கவில்லை என்றால் சாபம் கிடைக்கும்.
திருநங்கைகளை ஏளனமாக பார்க்கிற மனநிலை மாறியிருக்கும் இந்தக் காலங்களிலும் இது போன்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.மூன்றாம் பாலினமாக அரசாங்கமும் அங்கீகரித்திருக்கிறது.சமூகத்தில் மதிக்கும் படியான பல்வேறு வேலைகள் பார்க்கிற திருநங்கைகளையும் பார்க்கிறோம்.
இதில் பலருக்கும் புரியாத ஒன்று திருநங்கைகளின் ஆசியும் சாபமும் பலிக்குமா என்பதுதான்!
அரவாணிகள் என்று சொல்லப்படும் திருநங்கைகளை அர்தநாரீஸ்வரரின் நிலையிலும்,புதன் கிரகத்தின் அம்சம் என்றும் பழமையான ஜோதிடநூல் ‘சகாதேவ மாலை’குறிப்பிடுகிறது!
ஆண் அல்லது பெண்ணால் அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்கிய அரசுரர்களை அரவான்களால் அழிக்கப்பட்டதாக இதிகாச குறிப்புகள் சொல்கின்றன.மகாபாரதத்தில் அரவாணிகளை பலி கொடுத்த பிறகே, கிருஷ்ண பகவான்,சில காரியங்களை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
அதனால்,அவர்களை வைத்துதான் சில நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை தமிழ் நாட்டைவிட வட மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது.
கடைகளில் அரவாணிகள் காசு வாங்கிக் கொண்டு,திருஷ்டி சுற்றி… கையை கீழே குத்தி முறித்து ஆசிர்வாதம் செய்வார்கள். இப்படி செய்வதால் திருஷ்டி விலகும் என்ற நம்பிக்கை எல்லா இடங்களிலும் எப்போதும் உண்டு. அதேபோல், அவர்கள் சாபம் கொடுத்தால் அது பலிக்கும் என்ற நம்பிக்கையும் அநேக இடங்களில் இருக்கிறது. சிலர் அவர்கள் கொடுத்த ஆசியும், சாபமும், பலித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.