தாய்லாந்து குகையில் சிறுவர்களுடன் சிக்கிய பயிற்சியாளர் பௌத்த மத துறவியாக இருந்ததன் காரணத்தினாலேயே, சிறுவர்களை பீதியடையாமல் பார்த்துக்கொள்ள உதவியுள்ளது என இந்தியாவின் தாய்லாந்து தூதுவர் கூறியுள்ளார்.
தாய்லாந்தில் சியாங் ராய் பகுதியில் உள்ள தி தம் லுஅங் கோகி பகுதியில் சுற்றுலா சென்ற கால்பந்தாட்ட சிறுவர்கள் 12 பேர் தங்களது பயிற்சியாளர் உடன் இணைந்து, அங்கு ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக குகையிலேயே சிக்கி கொண்டனர்.
பின்னர் 9 நாட்களுக்கு பிறகு பிரித்தானியாவை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்களால், சிறுவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
ஆனால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக குகை பகுதியில் சகதி நிறைந்திருந்தால், சிறுவர்களை வெளியில் கொண்டு வருவதில் சிரமம் நீடித்து வந்தது. அதேசமயம் தாய்லாந்து கடற்படை வீரர்களுக்கு உதவுவதற்காக, பல நாடுகளை சேர்ந்த ஏராளமான ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் முன்வந்தனர்.
இதனையடுத்து கடும் சவால்களையும் தாண்டி, தேர்ச்சி பெற்ற நீச்சல் வீரர்களின் உதவியுடன் 3 கட்டமாக 13 பேரும் இன்று மீட்கப்பட்டனர்.
உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் வேளையில், குகையில் இருந்த சிறுவர்கள் எவ்வாறு பயமின்றி 9 நாட்களாக இருந்தனர் என்பது பற்றி, இந்தியாவின் தாய்லாந்து தூதர் அபிரட் சுகோந்தபிரோம் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், கூறுகையில், சிறுவர்களுடன் குகையில் சிக்கிய கால்பந்து பயிற்சியாளர் இதற்கு முன்பு ஒரு பௌத்த மத துறவியாக இருந்தவர். எப்படி சிக்கலான சூழ்நிலையை சாதுர்யமாக கையாள்வது என்பதில் தேர்ச்சி பெற்றிருந்த அவர், சிறுவர்களை தியானம் செய்யுமாறு பயிற்சியளித்துள்ளார்.
இதனால் தான் சிறுவர்கள் எந்தவித பயமுமின்றி குகையில் இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.