பெற்றோர் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதால் காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி குமரியில் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் கதறும் வீடியோ வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி, வேர்கிளம்பி அருகே கண்ணனூரை சேர்ந்தவர் சஜூ (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெரில் (22) என்ற மாணவியும் காதலித்து வந்தனர். பெரில் சுங்கான்கடையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களின் காதல் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி காதலர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். பிரச்னை விஸ்வரூபம் எடுக்கவே காதலனை கொன்று விடுவதாக பெண் வீட்டார் மிரட்டியுள்ளனர்.
துன்புறுத்தல்
இதனால் பெரிலை கல்லூரிக்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த மாணவி ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “சஜூவை தான் காதலிக்கவில்லை எனவும் அவர் தான் தன் பின்னால் வந்து தொல்லை கொடுப்பதாகவும்” எழுதி கொடுக்கும்படி கேட்டு அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.
கொல்ல திட்டம்
இல்லையெனில் என் மீது ஆசிட் ஊற்றுவேன் என்றும் அடித்து கை, காலை முறிப்பேன் என்றும் மிரட்டுகின்றனர். காதலன் சஜூவை கூலி படை ஏவி கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். சஜூவை வரவழைக்க அவரது தங்கையை தூக்கி கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர். நான் தற்போது எனது பாட்டி வீட்டில் பத்திரமாக உள்ளேன். எங்கள் வீட்டுக்கு சென்றால் என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.
உயிருக்கு ஆபத்து
என்னை நீங்கள்தான் காப்பாற்றி என் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அந்த பெண் அழுதுக் கொண்டே பயந்து பயந்து பேசும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடுமலைப்பேட்டை சங்கர், ஹைதராபாத் பிரணய் குமார் ஆகியோர் ஆவணக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில் இந்த வீடியோ குறித்து பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொலிஸ் நடவடிக்கை எடுக்குமா?
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலனுடன் சேர்த்து வைக்க கோரி பொறியியல் மாணவி வீடியோ மூலம் கோரிக்கை வைத்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு உயிர் பறி போகும் முன் காவல் துறை துரித நடவடிக்கை எடுத்து காதலர்களுக்கு பாதுகாப்பு அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.