இலங்கைக்கு அண்மையில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் நாட்டை விட்டு நகர்ந்து செல்வதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் கடல் பிரதேசத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் வலுவடைந்த நிலையில், அது சூறாவளியாக மாறி இலங்கையை நோக்கி நகர்ந்து வந்தது.
இந்நிலையில் டட்லி என பெயரிடப்பட்ட சூறாவளி தற்போது இலங்கை விட்டு நகர ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இதனையடுத்து தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நாளை முதல் தணியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பல பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி சசித்தா ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தென், ஊவா மாகாணத்திலும், களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டத்திலும், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில பிரதேசங்களில் இன்று அல்லது நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 9 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். சுமார் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.