சிலாபம் – புத்தளம் வீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் பயணித்த பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியுடன் மோதியமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சிலாபம் – புத்தளம் வீதியில் ஆரச்சிகட்டுவ, ஹெலபவட்டவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 36 பேர் பெண் ஊழியர்கள் மற்றும் சாரதியும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
பெண்கள் அனைவரும் கற்பிட்டிய, நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிங்கிரிய – விலத்தவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த விபத்தில் காயமடைந்துள்ள நிலையில், பேருந்து கற்பிட்டிய நுரைச்சோலையில் இருந்து பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிறுத்தப்பட்டிருந்த லொரியின் பின் பகுதியில் பேருந்து மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் தவறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.