தமிழகத்தில் திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மகள் மீனாவுக்கும்(20), குரிசிலாப்பட்டையைச் சேர்ந்த சின்னசாமி மகன் கோவிந்தராஜுக்கும்(25) நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தவுடன், மணமகள் வீட்டிற்கு புதுமண தம்பதி அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், கோவிந்தராஜ் நேற்று மாலை குரிசிலாப்பட்டைக்கு சென்றுள்ளார்.
அச்சமயம் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற மீனா, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தேடி வந்த குடும்பத்தினர், மீனா தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த வாணியம்பாடி பொலிசார், மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், மீனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.