Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam இன்று அபூர்வ தை அமாவாசை! இதன் சிறப்பு என்ன தெரியுமா!

இன்று அபூர்வ தை அமாவாசை! இதன் சிறப்பு என்ன தெரியுமா!

0
1475

ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாத காலமான தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். அந்த நேரத்தில் ஒருவரது முன்னோர்கள் அவரை காப்பாற்ற பித்ருலோகத்தில் இருந்து வருவார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் அளிக்கப்படுகிறது. தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் முன்னோர்கள், புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வருவதால், புரட்டாசி மாதமும் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பின்னர் தை மாதம் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்பும் அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசை தர்ப்பணமும் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த கலியுகத்தில் பிதுர்கள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும், சூட்சும வடிவில் நம்மை பார்த்து ஆசியளிப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒருவரது பிள்ளை என்ற முழு தகுதியையும் ஒருவர் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரை கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாக செய்திருக்க வேண்டும். “பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நினைப்பவன் புத்தியில்லாத மூடன்” என்று கடோபநிஷதத்தில் நசிகேதன் என்ற சிறுவனுக்கு எமதர்மன் கூறுகிறார்.

உத்தராயண காலம் தை மாதத்தில் தொடங்குவதால் தை அமாவாசையும், தட்சணாயன காலம் ஆடி மாதத்தில் தொடங்குவதால் ஆடி மாத அமாவாசையும் பிதுர் வழிபாட்டிற்கு ஏற்றவை என்றும் சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

தந்தைக்கு பித்ரு கர்மாக்களை செய்பவர்கள் அமாவாசை தினத்திலும், அன்னைக்கு பித்ரு கர்மாக்களை செய்பவர்கள் பவுர்ணமி தினத்திலும் மேற்கொள்வது புராதன காலம் முதல் இருந்து வரும் வழக்கமாகும். தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களுக்கான கடனை சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும்.

பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறியதன் அடிப்படையில் ராமர், தசரதருக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். பின்னர், சிவபெருமான் ராமரின் முன் தோன்றி, தர்ப்பணம் செய்ததால் அனைத்து பாவங்களும் நீங்கி நன்மைகள் தேடி வரும் என்று சொன்னதாக புராணங்கள் உரைக்கின்றன.

தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மன் அனுமதி தரும் நிலையில் எம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்கள் அவர்களது சந்ததியினர்களான பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும் வருவதாக ஐதீகம். அதனால், தை அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது. அதனால் பித்ருக்கள் மனம் குளிர்ந்து அளிக்கும் அவர்களது ஆசிகளால் குடும்பத்தின் துயரங்கள் யாவும் அகலும். பித்ரு சாபத்திற்கு ஆளாகியவர்களை தெய்வத்தால்கூட கருணை காட்டி உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.

மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து மேற்கண்ட நாட்களில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என்று அர்த்தம். இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகவும், உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமும் கொண்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும்.

‘முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்’ என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம். அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம்.

இவ்வாறான அமாவாசை தினத்தன்று அகோரிகள் வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Previous article96 பட பாணியில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 05.02.2019 செவ்வாய்க்கிழமை!