Home thatstamil one india tamil oneindia tamil ஆண் நண்பருடன் உல்லாச வாழ்க்கை! கோடிகளை சுருட்டிய கேடி பெண் அதிகாரி!

ஆண் நண்பருடன் உல்லாச வாழ்க்கை! கோடிகளை சுருட்டிய கேடி பெண் அதிகாரி!

0
547

திண்டுக்கல்லில் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியாக கடன் பெற்று, ஆண் நண்பருடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அலகாபாத் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் மீது புகார் எழுந்துள்ளது

திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் இயங்கி வரும் அலஹாபாத் வங்கியின் மேலாளராகப் பணி புரிந்து வந்தவர் சுவர்ணப்பிரியா. இவர் தனது பணிக்காலத்தில் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி வாடிக்கையாளரிடம் ஆவணங்களைப் பெற்றுள்ளார்.

ஆவணங்களைக் கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. திடீரென சுவர்ணப்பிரியா மதுரைக்கு மாற்றலாகிச் சென்ற நிலையில், கொடுக்கப்படாத கடனைத் திருப்பிச் செலுத்தச் சொல்லி கடன் கேட்டு விண்ணப்பித்த வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் சென்றுள்ளது.

நோட்டீசைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியை அணுகி கேட்டபிறகே, அவர்களது பெயரில் சுவர்ணப்பிரியா பல லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்தது தெரியவந்தது. தொடர்ச்சியான விசாரணையில் சுவர்ணப்பிரியா, தனது ஆண் நண்பரான சதீஷ் என்பவருடன் சேர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ வங்கியையும், வாடிக்கையாளர்களையும், தங்களுக்குக் கீழ் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் பலரையும் ஏமாற்றியது தெரியவந்ததாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சதீஷ் ‘ஜீவன் அக்ரி ஃபார்ம்ஸ்’ என்ற பெயரில் இயற்கை விவசாயப் பண்ணை நடத்தி வந்துள்ளார். அதில் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியும் பின்னர் கடனுதவியும் வழங்கப்படும் என வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சுவர்ணப்பிரியா கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி சதீஷின் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள், அவரது காரை பராமரித்து வரும் மெக்கானிக், புகைப்படக் கலைஞர் ஒருவர் என பலரது பெயரிலும் பல லட்ச ரூபாய் வரை சுவர்ணபிரியா கடன் பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

மோசடி விவகாரம் தெரியவந்ததை அடுத்து சுவர்ணப்பிரியா, வங்கி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மோசடி செய்த வங்கிப் பணத்தைக் கொண்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கேட்கச்சென்றால், சதீஷின் அண்ணன், பாதிக்கப்பட்டவர்களை ஆபாச வார்த்தைகளை சொல்லி திட்டுவதாகவும், மிரட்டுவதாகவும் வேதனை தெரிவிக்கும் அவர்கள் அதற்கு சாட்சியாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்

இதுவரை ஐந்தரை கோடி ரூபாய் வரை இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக 8 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர். தற்சமயம் சத்யப்பிரியா – சதீஷ் ஜோடி தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபிக்பாஸை வாழ வைத்த ஐஸ்வர்யா!
Next articleஅதிசயம் தெரியுமா? நந்தி சிலையின் வாயிலிருந்து ரத்தம் வடியும் சிறப்பு!