திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டி குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், சந்தேகநபரை கைது செய்வதற்கு நிலாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி அணில் பிரசன்ன ஜயசிங்க தலைமையில் விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
இதில், ராசரட்ணம் பிரபு என்ற நபரே கொலை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் வீசப்பட்டிருந்தார்.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 28 வயதுடைய குச்சவெளி பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் சுதர்ஜன் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் வாக்கு மூலம் வழங்கி நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலையை தாமே செய்ததாக இறுதியில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
நண்பர்களான இருவரும் கடந்த 28ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்ற போது, ராசரட்ணம் பிரபுவை மண்வெட்டியால் தலையில் தாக்கி கொலை செய்ததாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குறித்த சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





