விமல் வீரவன்சவின் மனைவியிடம் விசாரணை! ஜனாதிபதி கொலை சதித்திட்டம்!

0
398

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதித்திட்டம் குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்சவடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலப்படுத்திய நாமல் குமார என்ற நபருடன் தொடர்பு பேணிய இந்தியர், பல்வேறு சந்தர்ப்பங்களில் விமல் வீரவன்சவின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி ஷசி வீரவன்சவை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

விமல் வீரவன்சவை சந்திக்கும் நோக்கில் அவரது மனைவியை தாம் சந்தித்ததாக குறித்த இந்தியர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் உயிருக்கு ஆபத்து என பத்திரிகைகளின் வாயிலாக அறிந்து கொண்டதாகவும் இது குறித்து பேசும் நோக்கில் தாம் விமல் வீரவன்சவை சந்திக்க முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நபரின் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை எனவும், இந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள ஷசி வீரவன்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் இந்த இந்தியர் முன்னதாக கூறியிருந்தார்.

குறித்த இந்தியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇலங்கைத் தீவு ஆபத்திலிருந்து தப்பியது!
Next articleகுற்றம் சுமத்தும் ஹிருணிகா! எனது சிறப்புரிமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது!