பெற்ற தாய் தந்தையை ஒருமுறையாவது விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என ஒரு பிள்ளை கனவு காணுவது என்பது வழக்கமான ஒன்றே. ஆனால் ஒரு தொழிலதிபர் தன்னுடைய சொந்த கிராமத்தை சேர்ந்த முதியவர்கள் 120 பேர்களை விமானத்தில் பறக்க வைத்துள்ளார்.
அண்மையில் பணியின் காரணமாக கொல்கத்தாவுக்கு விமானத்தில் முதல் முறையாகச் சென்ற தொழிலதிபர் ரவிக்குமார், தன் ஊரைச் சேர்ந்த 120 முதியோர்களை ஒன்றிணைந்து விமானத்தில் செல்ல அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அதற்காக 6 ஆண்டுகளாக திட்டமிட்டு 50 விழுக்காடு தமது பங்களிப்புடன் ஊரில் உள்ள சிலரிடமும் நிதியை திரட்டியுள்ளார்.
சென்னை சுற்றிக் காண்பித்துள்ளார்
திட்டம் முழுமையாக நிறைவேறிய நிலையில், 50 வயதில் இருந்து 90 வயதுள்ள முதியவர்கள் 120 பேரை கோவை விமான நிலையம் அழைத்துச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து மெரினா உள்ளிட்ட பல இடங்களையும் சுற்றிக்காண்பித்துள்ளார்.
அதன் பின்னர் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலுள்ள முக்கிய கோவில்களுக்கும் அழைத்துச் சென்றார். இது தங்களுக்கு புதிய அனுபவத்தை அளித்ததாக சுற்றுலா வந்தவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.




