முன்னாள் காதலனை வைத்து கணவனை போட்டுதள்ளிய புது மணப்பெண்!

0

சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு காற்று வாங்கச் சென்ற புதுமணத் தம்பதியை தாக்கி 12 சவரன் நகை மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக புகார் கொடுத்த பெண்ணையே போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவனை பிடிக்காததால் கண்ணாமூச்சி விளையாடலாம் என கண்ணைக் கட்டி தாக்குதல் நடத்திய புதுமணப் பெண்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கதிரவன், சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் சென்னைக்கு அனிதா குடிபெயர்ந்துள்ளார்.

சனிக்கிழமையன்று வெயில் அதிகமாய் இருப்பதால் புளுக்கமாக இருக்கிறது என்றும், தன்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்லுமாறும், அனிதா கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து கதிரவன், அவரை சென்னை திருவான்மியூர் கடற்கரைக்கு காற்று வாங்க அழைத்துச் சென்றுள்ளார்.

கதிரவனும், அனிதாவும் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தம்பதியை வழிமறித்துத் தாக்கி, 12 சவரன் தங்க சங்கிலியையும், செல்போனையும் பறித்து சென்றதாகவும், தடுக்க முயன்றபோது கதிரவனை செயின் பறிப்பு கும்பல் இரும்பு கம்பியால் மூன்று முறை தலையில் கொடூரமாகத் தாக்கியதாகவும் அனிதா கூறினார். இதில் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த கதிரவன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அனிதா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகளை அமைத்ததோடு, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், வழிப்பறி என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின் போது அனிதா முன்னுக்குப் பின் முரணாக பேசியதாலும், கதிரவனைக் கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியதாலும் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதேநேரத்தில் அனிதாவின் செல்போனில் இருந்து பேசப்பட்ட அழைப்புகளை ரகசியமாகக் போலிசார் கண்காணித்தனர்.

அதில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் அடிக்கடி அனிதா பேசி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அனிதாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர் போலிசார். அதில் திருமணம் செய்த கணவனை பிடிக்காததால் முன்னாள் காதலனான ஆண்டனிஜெகன் மூலமாக கொள்ளை சம்பவம் என்ற போர்வையில் கணவரை கொலை செய்த அனிதாவே திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

திருமணம் ஆவதற்கு முன்பிருந்தே ஆண்டனிஜெகனுடன் பழகி வந்த அனிதா, கதிரவனை வேண்டாவெறுப்பாய் திருமணம் செய்துகொண்டார். இருந்தும் ஆண்டனிஜெகனுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கதிரவனை கொலை செய்துவிட்டு, ஆண்டனிஜெகனுடன் வாழலாம் என முடிவெடுத்த அனிதா கொலைக்கான தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோத்தகிரி பகுதிக்கு தேனிலவுக்குச் சென்ற போது காதலன் ஆண்டனிஜெகனை வரவழைத்த அனிதா, கதிரவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் கொலை திட்டத்தை செயல்படுத்தமுடியாததால், சென்னை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று கடற்கரைக்கு செல்வதை முன்னரே ஆண்டனிஜெகனுக்கு தெரிவித்த அனிதா, கணவருடன் ஒன்றும் தெரியாதது போல் கடற்கரைக்கு வந்துள்ளார். முன்னரே திட்டமிட்டபடி கண்ணாமூச்சி ஆடலாம் எனக் கூறி கதிரவனின் கண்ணை கட்டியுள்ளார் அனிதா. அப்போது அங்கு வந்த ஆண்டனிஜெகன் கதிரவனை தாக்க, அவர் மயங்கிச் சரிந்துள்ளார்.

பின்னர் தான் அணிந்திருந்த நகைகள், செல்போன்களை ஜெகனிடம் கொடுத்து தலைமறைவாகிவிடும்படி கூறிவிட்டு, தனது கணவரை தாக்கி கொள்ளை நடந்துள்ளதாக கூறி நாடகமாடியுள்ளார்.

அனிதாவின் பகீர் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிசார், அவரைக் கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின்பேரில் விளாத்திகுளத்தில் பதுங்கியிருந்த ஆண்டனிஜெகனை கைது செய்ததோடு, அவன் வைத்திருந்த நகைகள் மற்றும் செல்போன் ஆகியவற்றை மீட்டனர்.

கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாகக் கூறியுள்ள போலிசார், சிசிடிவி காட்சிகள்தான் குற்றவாளிகளை கைது செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது எனக் கூறியுள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றி சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதற்கும் உதவிகரமாக இருக்கும் என போலீசார் கூறியுள்ளனர்.

Previous articleபேஸ்புக் விருந்து நள்ளிரவில் வைத்த இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது!
Next articleசின்மயி புகாருக்கு கருத்து! தமிழர்களே! வைரமுத்து எனும் தமிழனின் சாபம் சும்மாவிடாது!