Home thatstamil one india tamil oneindia tamil சீமராஜா திரை விமர்சனம்!

சீமராஜா திரை விமர்சனம்!

0
554

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்
ராஜா வம்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றினாலும் ஊரே மதிக்கின்றது. அவரும் பல நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கின்றார், அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றார்.

அதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை லால் மிரட்டி பறித்துள்ளார்.

முதலில் மார்கெட்டை அடைய லால்,சிம்ரனும் மற்றும் சிவகார்த்திகேயனும் மோத யாருக்கு மார்க்கெட் என்பதற்காக ஒரு மல்யுத்த போட்டி நடக்கின்றது.

அதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா? சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா? மக்களின் நிலத்தை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
சீமராஜாவாக சிவகார்த்திகேயன் தன்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ, அதாவது காமெடி, ஆடல், பாடல் தாண்டி ராஜா வேஷத்திலும் மிரட்டியுள்ளார், ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார், மாஸ் இண்ட்ரோ, பன்ச் வசனம் என ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை இப்போது பிடிக்க ரெடியாகிவிட்டார், இதில் அரசியலுக்கு போய்டலாம் வா என்று சூரி சிவகார்த்திகேயனை கூப்பிடுவது போல கூட வசனம் உள்ளது, சரி ஏதோ ப்ளானில் இருக்கிறார் SK.

படத்தின் மிகப்பெரும் பலம் எல்லோரும் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன், சூரி காம்போ தான், ஒரு இடத்தில் கூட நம்மை ஏமாற்றவில்லை, காமெடியில் அசத்துகின்றனர், அதிலும் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டு சூரி அடிக்கும் கலாட்டா, இப்போது எல்லாம் படம் பார்க்க தானே லாப்டாப் வச்சுருக்காங்க என கொடுக்கும் கவுண்டர் என எப்போதும் போல் இந்த கூட்டணி பாஸ்மார்க்.

இதை தவிர படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, சிம்ரனுக்கும் அவருடைய டப்பிங் குரலுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை, சமந்தா படத்தில் கொடுக்கும் ரியாக்ஸனை விரல் விட்டு எண்ணிவிடலாம், சிறுத்தை வந்தால் கூட நிதானமாக ‘சிறுத்தை வந்துடுச்சுனு’ ரியாக்ஸன் காட்டாமல் நிற்கின்றார்.

லால், நெப்போலியன் என பலரும் ஏமாற்றமே, காமெடியா, கதையா என்ற இடத்தில் பொன்ராம் மிகவும் தடுமாறியுள்ளார், காமெடியை வைத்து கதையை நகர்த்திய முதல் பாதி ஓரளவிற்கு ஓகே என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு சென்று, சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியிருந்தால் சூடுப்பிடித்திருக்கும்.

ஆனால், படம் எப்போது முடியும் என்ற மனநிலையில் ராஜா கதை வருகின்றது, சிஜி வேலைகள் உண்மையாகவே சூப்பர், இந்த பட்ஜெட்டில் மிரட்டியுள்ளனர், அப்படியிருந்தும் அந்த காட்சிகள் வந்த இடம் தான் கொஞ்சம் பொறுமையை சோதித்தது.

டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.

க்ளாப்ஸ்
படத்தின் முதல் பாதி.

சிவகார்த்திகேயன், சூரி காம்போ சிரிப்பிற்கு கேரண்டி.

பல்ப்ஸ்
வலுவே இல்லாத திரைக்கதை, அதிலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது.

நெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம், கடைசி வரை எந்த ஒரு இடத்திலும் நமக்கு அவர்களை வில்லனாக பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் ராஜாவே குழப்பத்தில் இருக்க, மக்கள் நாம் என்ன சொல்வது!

Previous articleபாலியல் தொல்லை காரணமாக விசித்திரமாக தற்கொலை செய்து கொண்ட தமிழ் பெண்!
Next articleஅடைக்கலம் தேடிய காதல் ஜோடிக்கு பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடூமை!