சின்மயி புகாருக்கு கருத்து! தமிழர்களே! வைரமுத்து எனும் தமிழனின் சாபம் சும்மாவிடாது!

0

‘மீ டூ’ ஹேஷ்டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சின்மயி.

இந்த விவகாரம் தொடர்பாக ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் விஜய் மில்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கவிஞர் வைரமுத்து அவர்கள் வெறும் கவிஞரல்ல, வெறும் கலைஞரல்ல. தமிழ்நாட்டின் பல அடையாளங்களில் அவரும் ஒருவர், பல தேசிய விருதுகள் பெற்று நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்! பல காவியங்கள் படைத்து நம் தமிழ்மொழிக்கு சிறப்பு சேர்த்தவர் !

இன்று பாடகி திருமதி . சின்மயி அவர்களால் பாலியல் பழி சுமத்தப்பட்டிருக்கிறார். சின்மயி வார்த்தைகளில் உண்மை இருக்கலாம், உண்மை இல்லாமலும் இருக்கலாம்! சின்மயி சொன்ன வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு இன்று ஊடகங்களும் , பத்திரிகைகளும் வலைதளங்களும் விவாதமேடை, பட்டிமன்றம், கருத்தரங்கம் என்று வைரமுத்து அவர்களின் புகழை நாறடித்துக் கொண்டிருக்கிறது!

ஒருவேளை பின்னாளில் சின்மயி வார்த்தைகள் பொய்யாய் இருக்கும் பட்சத்தில் ஒருவரின் புகழை போட்டிபோட்டுக்கொண்டு வெட்டி கூறு போட்டவர்கள் பொறுப்பேற்பார்களா?

ஆதாரமில்லாத குற்றச்சாட்டிற்கு ஏன் இவ்வளவு அவசரமாக ஆதரவு பரபரப்பு ?

சின்மயி குரல் கொடுப்பது அவர் உரிமை. அதை தவறென்று சொல்லவில்லை! ஆனால் தமிழோடு தமிழாய் வாழ்ந்தவனை தமிழ்க் குரல்கள் தகர்த்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர்களே, தமிழுக்காக வாழ்பவனை ஏன்டா தமிழனாய் பிறந்தோம் என்று நினைக்க வைத்துவிடாதீர்கள்!

ஒருவேளை வைரமுத்து அவர்களின் பக்கம் நியாயம் இருந்தால் அந்தத் தமிழனின் சாபம் நம்மை சும்மா விடாது ! இந்த விஷயத்தில் பொறுமை தேவை என்பதே என் எண்ணம் !

காய்த்த மரம் கல்லடிபடத்தான் செய்யும், ஆனால் இங்கே கல்லடிபடுவது தமிழ்மரம்! தமிழா பொறுமை காப்போம் ! நியாயம் எதுவோ அது வெல்லட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Previous articleமுன்னாள் காதலனை வைத்து கணவனை போட்டுதள்ளிய புது மணப்பெண்!
Next articleகடைசியில்… அரசியல் வாதிகளுக்கு ஆப்பு அடிக்கும் ஸ்ரீரெட்டி!