கண்ணமங்கலம் அருகே இடுப்பளவு தண்ணீல் மூழ்கியபடி ஆற்றில் சடலத்தை எடுத்துச்சென்று கிராம மக்கள் அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சி மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (41). இவர் உடல்நலக்குறைவால் கடந்த 16ம் தேதி இறந்தார். நேற்றுமுன்தினம் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, அங்குள்ள கமண்டல நதிக்கரையின் மற்றொரு பக்கத்தில் உள்ள மல்லிகாபுரம் சுடுகாட்டில் அடக்கம் செய்ய சடலத்தை கொண்டு சென்றனர்.
அப்போது ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடியது. இதனால் சடலத்தை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வயதானவர்கள், சிறுவர்கள் கரையில் நின்றுவிட்டனர். இளைஞர்கள் மட்டும் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியபடி சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





