முஸ்லிம் மக்களின் மார்க்க பெருநாளான புனித ரமழானை சிறப்பாக கொண்டாடி வரும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
புனித ரமழான் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
எம்மை நாம் உணர்ந்து, அனைவருடனும் கூட்டுணர்வுடன் அன்பையும், எண்ணங்களையும் உணவையும், பொருட்களையும் வழங்கி வாழ சமத்துவத்திற்கான வழியை காட்டியுள்ளது இஸ்லாமிய மார்க்கம்.
உலக மகான்களின் வழியில் மார்க்கங்களும் போதனைகளும், சிந்தனைகளும் ஒருவழி நிலையையே காட்டுகின்றது.
30 நாட்கள் நோன்பின் நோக்கம் ஈடேற நாம் பெற்ற அனுபவத்தினையும், பயிற்சியையும் வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இதய வெளிகளில் சூழ்ந்திருக்கும் தீயவற்றை வெளியேற்றி வேரறுத்து கொள்வோம். பாரம்பரியமிக்க எமது இலங்கை தேசத்தின் மக்கள் கூட்டு பொறுப்புடன் வாழ்ந்தவர்கள்.
பாரம்பரியங்களை கடைபிடித்தும், எமது பிரார்த்திப்புக்களின் பலாபலன்கள் யாவும், நவீனத்துவம் என்னும் போர்வையில் நீர்த்து போகலாகாது.
இலங்கை தேசத்தில் இடம்பெறும் தாக்கங்கள் உலகளவிலோ, உலகளவில் இடம்பெறும் தாக்கங்கள் எமது நாட்டிலோ ஆதிக்கம் செலுத்துவதற்கு நமது நாட்டு மக்கள் இடமளிக்க கூடாது. அழகிய எமது தேசத்தை ஐக்கியமான பிரார்த்தனைகளினால் மீட்டெடுப்போம்.
ஐயங்களை களைந்து ஐக்கியத்தை ஜனரஞ்சகமாக்குவோம். இலங்கையராக ஒன்றிணைந்து கூட்டுணர்வுடன் பலமிக்க தேசத்தை கட்டியெழுப்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.




