புகையிரத ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பொலன்னறுவையில் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளையடுத்து, தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்ததாக புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் பீ.எம்.பீ. பீரிஸ் கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கீகரிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சரத் அமுனுகம ஆகியோருக்கும் இது தொடர்பான பணிப்புரைகளை ஜனாதிபதி விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்கமைய, அனைத்து புகையிரதங்களையும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்பொழுது இலங்கையர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.




