இந்தியாவுடனான பழைய பிழையான புரிந்துணர்வை நீக்கிவிட்டு 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ச தி ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு இந்திய புலனாய்வு பிரிவின் காரணமாகவே தாம் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததாக தெரிவித்திருந்ததன் பின்னர் அவர் முதல் தடவையாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்தியாவுடன் பிழையான புரிந்துணர்வை கொண்டிருந்ததாக மஹிந்த தி ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.
தமது தோல்விக்கு இந்தியாவை குற்றம் சுமத்திய போது தமது மனநிலை அவ்வாறு இருந்தது, எனினும் தற்போது அவற்றை மறந்து எதிர்காலத்தை நோக்கிப் பார்ப்பதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
தாம் 18 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் வைப்பிலிட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் கூறுகிறது. எனினும் இன்னும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று மஹிந்த சிரித்தவாறு தெரிவித்துள்ளார்.
சீனாவிடம் பெற்ற கடன்களை பொறுத்தவரை அதனை திருப்பி செலுத்த முடியும். எனினும் அதனை சிறிசேனவின் அரசாங்கம் பிழையாக கையாளுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை அது தோழமை நாடு. சீனா நீண்ட கால நட்பு நாடு. இந்த நிலையில் சீனாவுடன் தொடர்பு கொள்கின்ற போது இந்தியாவின் நலன்களை தாம் மறக்கவில்லை என்று மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
ஒருபோதும் இலங்கையை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்
மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப் போவது தொடர்பில் தாம் எதிர்ப்பை வெளியிடவில்லை. எனினும் தாம் அரசாங்கத்தின் தனியார் மயத்திட்டத்தையே எதிர்த்ததாக மஹிந்த தெரிவித்துள்ளார்.
தாம் மீண்டும் பதவிக்கு வந்தால், இந்தியாவின் முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்போவதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பிரதமரும், ஜனாதிபதியும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்க கொள்கைகளுக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன.
மீண்டும் சிறிசேனவும் ரணிலும் இணைந்து போட்டியிடுவார்கள் என்று நாம் நம்பவில்லை. போட்டியிட்டாலும் அவர்கள் வெற்றிப்பெறப் போவதில்லை.
துரதிஸ்டவசமாக மைத்திரிபால சிறிசேன எம்முடன் இணைந்து செயற்பட மாட்டார் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் தமது முன்னைய அரசாங்கம் தவறுகளை செய்திருப்பதை தாம் உணர்வதாக தெரிவித்துள்ள அவர் தற்போது அதனை சீர்செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற கலவரங்களின் போது தமக்கு பின்னரே ஜனாதிபதியும், பிரதமரும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர் என்றும் மஹிந்த கூறியுள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 30 வயதான தமது மகன் நாமல் ராஜபக்ஸ போட்டியிட முடியாது. எமது சகோதரர் நிச்சயமாக போட்டியாளராக இருக்கலாம். எனினும் கட்சியின் தீர்மானமே இறுதியாக இருக்கும் என்றும் மஹிந்த தி ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.




