இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக அமைக்கப்பட்ட நாடளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
இதன்படி தெரிவுக்குழு விசாரணைகளை நேரலை செய்யும் ஊடகங்கள் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக பாதுகாப்பு அதிகாரிகளை விசாரிக்கும்போது ஊடகங்களை அனுமதிப்பதில்லை என்று நேற்றிரவு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் நேற்றிரவு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்ட நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி அமைச்சரவை கூடும் சாத்தியமுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் மூலமாக தெரியவந்துள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக நாட்டின் பாதுகாப்புத் தகவல்கள் அம்பலமாகின்றன என்று கூறிய ஜனாதிபதி, தெரிவுக்குழுவை ரத்துச் செய்யும்வரை தாம் அமைச்சரவையைக் கூட்டப்போவதில்லை என்றும் கடுமையாக கூறியிருந்தார்.
இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஒன்று ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு முயன்றபோதும் அது ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தெரிவுக்குழுவை ரத்துச் செய்யப்போவதில்லை என்றும் அது நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு உட்பட்டதென்றும் ஆளுங்கட்சித் கட்சித் தரப்புக்கள் கூறிவந்தன.
இதனால் கடந்த வார அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாமற்போனதுடன் இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி கடும் நிலைப்பாட்டில் இருந்துள்ளார்.
நேற்றிரவு அவருடன் சில அமைச்சர்கள் சந்தித்துப் பேசியதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டாமல் விடுவது நாட்டின் அரசியலுக்கு நல்லதல்ல எனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தெரிவுக்குழு விசாரணைகளின்போது முக்கியமாக பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பான விசாரணையில் ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை என்றும் இதுதொடர்பில் சபா நாயகரிடம் உறுதிப்படுத்துவதாகவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையிலேயெ அமைச்சரவையை மீண்டும் கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.