ருவான் விஜேவர்தன தலைமையிலான குழு: ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை!
பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையிலான குழுவொன்று இதற்கான வியூகத்தை வகுத்து வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய கட்சியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சி பாரியதொரு தோல்வியை சந்தித்திருந்நது.
இந்நிலையில் அக்கட்சிக்கு ஒரேயொரு தேசிய பட்டியல் உறுப்புரிமை மாத்திரம் கிடைக்கப் பெற்றது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காகக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அதற்காக நியமிக்கப்பட்டார்.
பின்னர் கடந்த மே 9ம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைய தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்திருந்த நிலையில். ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால், பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதன்போது அவர் ஆறாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து ஜீலை 9ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக ஜனாதிபதி பதவியில் இருந்து ஜீலை 14ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துவிட்டு கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
பின்னர் சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு வழங்கியதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கடந்த ஜீலை 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
புதிய ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியில் மூன்று பேர் போட்டியிட்டனர்.
அதில் ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டலஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் கிடைத்திருந்தன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளை பெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் உடைய 8ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நாடாளுமன்றத்தில் இருந்த ஒரே உறுப்பினராக இருந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்று ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.