பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து மீண்டும் தனது கடும் கவலையினை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும் நாட்டின் அரசமைப்பிற்கும் அரசியல் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நடக்கவேண்டும் என தான் மீண்டும் அழைப்புவிடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர்,
”பொதுமக்களின் ஜன நாயகக் குரலாக உள்ள பிரதி நிதிகளை ஒழுங்கமைக்க சபா நாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு நாடாளுமன்றை உடனடியாக கூட்டுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை நான் வலியுறுத்துகிறேன்.” என்றார்.
மேலும் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை சிறிலங்காவின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என அரச் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.