காற்றில் இருந்து மிகக் குறைந்த செலவில் சுத்தமான தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அமெரிக்க ஜோடிக்கு ரூ.11 கோடி(15 லட்சம்டாலர்) பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரைச் சேர்ந்த டேவிட் ஹெர்ட்ஸ், இவரின் மனைவி லாரா டாஸ் ஹெர்ட்ஸ் ஆகியோரே இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் தொழில் நுட்பத்தின் மூலம் நாள்தோறும் காற்றின் மூலம் குறைந்தபட்சம் 2 ஆயிரம் லிட்டர் சுத்தமான நீரை எடுக்க முடியும். இதற்கு இந்திய மதிப்பின் படி 15ரூபாய்க்குள் (2சென்ட்கள்) மட்டுமே செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் இணைந்து, “திஎக்ஸ் பிரைஸ்” எனும் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் சமூகத்துக்குப் பயன்படும் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவோர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டி நடத்தப்படுவதன் நோக்கம் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், பூமியின் சூழலை மேம்படுத்த வேண்டும் என்பது நோக்கமாகும்.
இந்தப் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரைச் சேர்ந்த டேவிட் ஹெர்ட்ஸ், இவரின் மனைவி லாரா டாஸ் ஹெர்ட்ஸ் ஜோடி கண்டுபிடித்த தொழில்நுட்பத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. காற்று மூலம் தண்ணீர் எடுக்கும் இவர்களின் தொழில்நுட்பம் அனைவரையும் கவர்ந்தது, செலவு குறைவாகவும், எளிதாகக் கிடைக்கும் பொருட்கள், கழிவுப்பொருட்களைக் கொண்டு தண்ணீர் எடுக்கலாம் என்பதால் போட்டி நடுவர்களால் ஏற்கப்பட்டது.
இவர்களின் தொழில்நுட்பத்தின்படி, பெரிய கப்பலில் சரக்கு கொண்டு செல்லப்படும் பெரிய கன்டெய்னருக்குள் காற்றைச் செலுத்தி அந்தக் காற்றை மரக்கழிவுகள், மரத்தூள், மரக்கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி சூடுபடுத்துவதன் மூலம் காற்றில் உள்ள ஈரப்பதம் வெப்பத்தால், நீராக மாறும். இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் சுத்தமான நீராக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு முதல்பரிசு கிடைத்துள்ளது குறித்து டேவிட் ஹெர்ட்ஸ் கூறுகையில், நாங்கள் கண்டுபிடித்துள்ள இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் நாள்ஒன்றுக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரம் லிட்டர் சுத்தமான தண்ணீர் எடுக்க முடியும். இது செலவில்லாத, சிக்கனமான முறையாகும்.
நாம் தண்ணீரை உருவாக்க மரத்தூள், மரக்குப்பை கிடைக்காவிட்டால், பரவாயில்லை, அதற்குப் பதிலாக தேங்காய் மட்டை, தவிடு, நிலக்கடலை தோள், காய்ந்த புற்கள் மற்றும் இயற்கை கழிவுகள் ஆகியவற்றை எரியூட்டப் பயன்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பத்தை இயற்கை பேரிடர் காலங்கள், பூகம்பம், நிலச்சரிவு, வறட்சி போன்ற காலங்களில் பயன்படுத்தி மக்களுக்கு எளிதாகச் சுத்தமான தண்ணீர் கொடுக்க முடியும். ஆனால், எங்கள் தொழில்நுட்பத்தை இன்னும் சிறிது மேம்படுத்த வேண்டும்.