ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், ராமநாதபுரம் மாவட்டத்தின் புவியியல் அடையாளம். இந்துக்களின் புனித திருத்தலங்களில் தென்னிந்தியாவில் முதன்மையானது.
கோயில் பெருமை
ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமன் சிவனை மணலால் ஆன லிங்கத்தை வைத்து இங்குதான் வழிபட்டார் என்பது ஐதீகம். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ராமேஸ்வரமும் ஒன்று.
கோயிலின் மூலவர் பெயர் ராமநாத சுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி. இந்த ஆலயத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற சைவநெறி புலவர்கள் வந்து பாடல் பாடியுள்ளனர்.
பாண்டியர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலின் காலம் பற்றிய சரியான குறிப்புகள் இல்லாவிட்டாலும் 1000- 2000 ஆண்டுகளுக்கு உட்பட்டது.
திராவிட கோயில் அமைப்பு
நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது.
வெளிப்பிரகாரங்கள், உட்பிரகாரங்கள் என பல பிரகாரங்களைக் கொண்டது. இந்த கோயிலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் கட்டப்பட்டது. கோயிலின் அமைப்பு திரவிடர் கட்டட கலை பாணியில் உள்ளது.
பிரம்மாண்ட பிரகாரம்
ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, இக்கோயிலின் உலகப் புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தை (1740 – 1770) இடைப்பட்ட காலத்தில் கட்டினார்.
இது 1212 தூண்களுடன் 690 அடி நீளம், 435 அடி அகலமும் இருபத்தி இரண்டரை அடி உயரமும் கொண்டது.
எளிய பயணம்
வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் என்னும் இடத்தில் அமைந்துள்ளதால், தமிழகத்தின் பிரபல சாலையான கிழக்கு கடற்கரை சாலை வழியாக எந்த பெரிய நகரங்களில் இருந்தும் செல்ல வசதிகள் உண்டு.
காசி- ராமேஸ்வர யாத்திரை முறை
முதலில் ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தத்தில் நீராடி, அங்கு மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு, காசி சென்று கங்கை தீர்த்தத்தில் போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டும்.
பிறகு, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்துவந்து, மீண்டும் ராமேஸ்வரம் சென்று ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
சில சிறப்புகள்
அம்பிகை பீடத்திற்கு கீழே, ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இது சேதுபீடம் ஆகும்.
அம்மன் சன்னதியில் முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார்.
யோக கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்கும் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டுகின்றனர்.
கர்ப்பகிரகத்தில் உள்ள ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு நாள்தோறும் காலை 5- 6 மணி முதல் பூஜை செய்யப்படுகிறது.
திருவிழாக்கள்
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகியவை இங்கு முக்கிய திருவிழா நாட்களாகும்.
தீர்த்தங்கள்
மகாலட்சுமி தீர்த்தம்
சாவித்திரி தீர்த்தம்
காயத்திரி தீர்த்தம்
சரஸ்வதி தீர்த்தம்
சங்கு தீர்த்தம்
சக்கர தீர்த்தம்
சேதுமாதவர் தீர்த்தம்
நள தீர்த்தம்
நீல தீர்த்தம்
கவய தீர்த்தம்
கவாட்ச தீர்த்தம்
கெந்தமாதன தீர்த்தம்
பிரமஹத்தி வினோசன தீர்த்தம்
கங்கா தீர்த்தம்
யமுனா தீர்த்தம்
கயா தீர்த்தம்
சர்வ தீர்த்தம்
சிவ தீர்த்தம்
சாத்யாமமிர்த தீர்த்தம்
சூரிய தீர்த்தம்
சந்திர தீர்த்தம்
கோடி தீர்த்தம்.
குடமுழுக்குகள்
இந்த கோயிலின் முதல் குடமுழுக்கு 1948 ல் நடந்தது. இரண்டாவது குடமுழுக்கு 1975 லும், மூன்றாவது குடமுழுக்கு 2001 லும் நடந்தது.
பிறகு 14 ஆண்டுகளுக்குப் பிறகு, கோயிலின் 4 வது குடமுழுக்கும் புதிதாக கட்டப்பட்டுள்ள வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களுக்கான குடமுழுக்கும் 2016 ல் கடந்த ஜனவரியில் சிறப்பாக நடந்தது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற இலக்கணத்தை கடந்து குடமுழுக்குகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விவேகானந்தர் விஜயம்
ஆன்மீகத்தில் அன்பின் முதன்மையையும் இந்து மதத்தில் சமதர்ம புரட்சியையும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி ஏற்படுத்தி வந்த விவேகானந்தர் 1897 ஜனவரி 27 ல் ராமேஸ்வரத்திற்கும் வருகை புரிந்துள்ளார்.
சுவாமி நாகநாதரை வணங்கி, அவர் ஆற்றிய சொற்பொழிவில், அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை.
சுத்தத்துடன் பிரார்த்திப்பவர்களுக்கே சிவன் செவிசாய்ப்பார் என்ற நெறியில் பேசினார்.
இந்த கோயிலை ஒட்டிய புகழுடையது கோதண்டராமர் கோயிலும், ராமர் பாதமும் பயணிகள் அவற்றையும் பார்ப்பது முழுமையானது.