Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan தீபாவளிப் பண்டிகை கொண்டாட காரணம் என்ன? தீபாவளிப் பண்டிகை தோன்றக் காரணங்கள் !

தீபாவளிப் பண்டிகை கொண்டாட காரணம் என்ன? தீபாவளிப் பண்டிகை தோன்றக் காரணங்கள் !

0
869

இந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகை தீபாவளிதான். மதம், மொழி, கலாச்சாரம் இவற்றினால், ஏனைய பண்டிகைகளுக்கு மக்கள் காட்டும் ஆர்வத்தில் வித்தியாசமிருக்கலாம்.

ஆனால், ஏழை முதல் பணக்காரன் வரை எல்லா இனத்தவராலும் ஒரே மாதிரி வரவேற்புப் பெறும் பண்டிகை தீபாவளி. இந்தியாவின் வட மாநிலங்களில் இதைத் ‘ திவாளி’ என்கிறார்கள். அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் தீபாவளிப்பண்டிகை வருகிறது.

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். ஒளித்திருநாள் என்று கூறுவதும் பொருந்தும். வட மாநிலங்களில், தீபாவளியின்போது வீடுகளில் தீபாலங்காரம் விசேடமான அம்சமாகும். தீவாஸ் எனப்படும் அகல் விளக்குகள் அங்கே ஒளி வீசிச் சிரித்துக்கொண்டிருக்கும்.

இந்தியாவின் தென் மாநிலங்களில், வீடுகளிலும், கோயில்களிலும் அகல் விளக்குகளால் அலங்காரம் செய்யும் வழக்கத்தைக் கார்த்திகை மாதத்துக் கிருத்திகையில் வரும் கார்த்திகைப் பண்டிகையில் கடைப்பிடிக்கின்றார்கள். இதேபோல், ‘திவாளி’ பண்டிகை வட மாநிலங்களில் லக்ஷ்மி பூஜையாகக் கருதப்படுகின்றது. வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அந்த ஆண்டின் புதுக்கணக்கை ‘திவாளி’ பண்டிகையின்போதுதான் ஆரம்பிப்பது வழக்கம்.

தீபாவளிப் பண்டிகை தோன்றக் காரணங்கள்:

நரகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்று மக்களுக்கு விடுதலையும், மகிழ்ச்சியும் அளித்தார், மகாவிஷ்ணுவாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான். அவனைத் தான் கொல்லாமல், தன் மனைவி சத்தியபாமாவின் கைகளால் அவன் கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, போர்க்களத்தில் மயங்கித் தேரில் சரிந்து வீழ்ந்து மாயம் புரிகிறார், கண்ணன் (கிருஷ்ணன்).

தன் தாயைத்தவிரத் தனக்கு வேறு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான், நரகாசுரன். எந்தத் தாயாவது தன் மகனைக் கொல்லுவாளா? ஆனால், சத்தியபாமாவுக்கோ, நரகாசுரன் தன் மகன் என்று தெரியாது. தெரியாதபடி மாயம் செய்து மயங்கியவர் கிருஷ்ணன்.

ஆகவே, கணவனைக் காக்க, தேரோட்டியாகப் போர்க்களத்துக்குச் சென்றிருந்த சத்தியபாமா, தன் வில்லை எடுத்து வளைத்தாள். அடங்காத கோபத்துடன், நரகாசுரனைக் கொன்று வீழ்த்தினாள். உயிர் பிரியும்போது ஞானம் பெற்ற அந்த அரக்கன், ஒரு வரம் கேட்டான். ” என் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்.என் கொடிய செயல்களால் இருண்டு கிடந்த இல்லங்களில் ஒளி விளங்க வேண்டும். மக்கள் நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு மகிழ்ச்சியாக இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டான்.

நரகாசுரன் கொல்லப்பட்ட அத் தினத்தையே தீபாவளிப்பண்டிகையாகக் கொண்டாடுவதாகப் புராணங்கள் விளக்குகின்றன. அதனால், இத்தினத்தை, நரக சதுர்த்தி என்றும் அழைப்பார்கள்.

கிருபானந்த வாரியார், ” பார்வதி தேவியர் கேதார கெளரி விரதம் இருந்து, சிவபெருமானின் இடப்பக்கத்தில் இடம்பெற்ற திருநாளே தீப விழாவாகக் கொண்டாடப்படுகிறது ” என்றுரைக்கிறார்.

தீபாவளித் திருநாளில், திருக்கயிலாயத்தில், சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஆடியதாக ஒரு புராணக் குறிப்பு உண்டு. இதை நினைவூட்டும் விதத்தில் குஜராத்தில் தீபாவளி தினத்தில் இந்து மக்கள் சொக்கட்டான் விளையாட்டு ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கானக வாழ்வு முடிந்து அரக்கன் இராவணனை அழித்து, சீதையை மீட்ட இராமபிரான், வெற்றித் திருமகனாக அயோத்தி திரும்பிய திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்களை ஏற்றிவைத்து மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினார்களாம். அதுவே தீபத் திருநாளாக மாறியது என்று உரைக்கும் சான்றோரும் உண்டு.

இப்படி பலவிதமான காரணங்கள் கொண்டு தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டாலும், அத்திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே ஒன்றுதான். ” தீமைகள் என்னும் இருள் அகன்று, உலகம் முழுவதும் பக்திப் பேரொளியைப் பெற வேண்டும் ” என்பதே அது. எனவே, தீபாவளித் திருநாளில், பெரியவர்கள் வகுத்துத் தந்த வழியில், முறையாக இறைவனைப் பூஜித்து அவனது அருள் பெற வேண்டும்.

Previous articleபதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா, வெந்தய லேகியம்!
Next articleபெண்கள் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க!