மன்னார் மனிதப் புதைகுழி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முழுமையான மனித எச்சங்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இதுவரை 199 முழுமையான தனி மனித எச்சங்கள் அகற்றப்பட்டு, பொதிசெய்யப்பட்டுள்ளதாக அகழ்வுடன் தொடர்புபட்ட தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை அகழும் பணிகள் நேற்று திங்கட்கிழமை 96 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஐா மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ச தலைமையில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
களனி பல்களைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவ இணைந்த குழுவினரும் கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் நேற்று மீண்டும் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த அகழ்வுப் பணிகளில் இதுவரை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 207 தனி முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 199 எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பொதிசெய்யப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகும் மூத்த சட்டத்தரணி, நேற்றைய தினம் அகழ்வுப் பணியை கண்காணித்ததுடன் அதன் நிலமைகளை அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பாக உள்ள சட்டவைத்திய அதிகாரியிடம் கேட்டறிந்து கொண்டதாக தெரிவித்தார்.