இத்தாலியில் குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக, 3வது குழந்தை பெற்றவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குறிப்பாக, இத்தாலி நாட்டில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு அந்நாட்டில் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையை விட முதியவர்களே அங்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் பல ஆண்களும், பெண்களும் ஒன்றாக சேர்ந்து குடும்பமாக வாழ்ந்தாலும், அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. எனவே, குழந்தை பெற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவது இல்லை.
மேலும், தம்பதியரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமல் பிறப்பை நிறுத்தி விடுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு ஒரு முடிவெடுத்துள்ளது.
அதாவது, 3வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்க உள்ளது இத்தாலி அரசு. இந்த நிலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்தாலியில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அரசுக்கு சொந்தமாக உள்ளதால், இந்த திட்டத்தினை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.