புரட்டாசி மாதம் ஏன் பெருமாளுக்கு உகந்த நாள்? சனிக்கிழமையில் அப்படி என்ன ஸ்பெஷல்
ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரிய பகவான் பிரவேசிக்கிறார். இதன்படி கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும்போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது திருப்பதி ஏழுமலையான் தான்.
அதனால் தான் இந்த மாதத்தினை பெருமாளுக்கு உகந்த பெருமாள் மாதம் என்று கூறுகிறார்கள். மேலும், புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.
புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் மிகவும் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் நமது துன்பங்களை நீக்கி இன்பம் தருவார். அதிலும், ஏழரை சனியால் பிடிக்கப்பட்டவர்கள் விரதம் இருந்தால் சனியின் தொல்லை நிச்சயம் நீங்கும்.
சனிபகவான் கலியுகத்திற்கு முதன்முதலாக வரும் வழியில் நாரதர், சனிபகவானிடம் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் சக்தியின் மூலம் யாரை வேண்டுமானால் துன்பப்படுத்தலாம். ஆனால், திருமலை பக்கம் சென்று விடாதீர்கள் என்று அவரை தூண்டி விடுவது போல கூறினார்.
அதைக்கேட்ட சனிபகவான், எதை செய்ய வேண்டாம் என்று நாம் சொல்கிறோமோ அதையே நாம் செய்வது போலவே! சனிபகவானும் என்னை யார் என்ன செய்ய முடியும்? என்று திருமலையின் மேல் தன் காலை வைத்தார். கால் வைத்த அடுத்த நொடி சனிபகவான் பயங்கரமாக தூக்கி வீசப்பட்டார்.
திருமலையில் யார் இருக்கிறார்? என தெரிந்தும் மற்றவரை துன்பப்படுத்தி இன்பம் காணும் சனிபகவான், மகாவிஷ்ணுவே இங்கு திருவேங்கடவனாக இருப்பதை கண்டு அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டார். இதனால், கோபம் கொண்ட பெருமாள் சனிபகவானிடம், என்னையே நினைத்து வாழும் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்த துன்பமும் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கினார்.
சனியும் பணிவுடன் உங்களின் உண்மையான பக்தர்களை நான் என்றும் துன்பப்படுத்த மாட்டேன் என்று கூறினார். பின்னர் சனிபகவான் பெருமாளிடம், மகாபிரபு எனக்கு ஒரு வரம் தர வேண்டும் என்று கேட்டார். நான் பிறந்தது புரட்டாசி சனிக்கிழமை.
அதனால் அந்த நாளை தங்களுக்கு உகந்த நாளாக தங்கள் பக்தர்கள் பூஜித்து வேண்டினால் அவர்களுக்கு வேண்டிய வரத்தை தாங்கள் தரவேண்டும் என்ற வரத்தை கேட்டார். பெருமாளும் சனிதேவனுக்கு வரத்தை அளித்து சனிக்கிழமையை தனக்கு உகந்த நாளாக ஏற்று கொண்டார்.
அதனால் தான் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக உருவானது. சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர் ஆவார். சனி கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உகந்த நாளாக உள்ளது.