இந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்! கெடு முடிய இன்னும் 10 நாட்கள் தான்!

0

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கெடு முடிவடைய 10 நாட்கள் மட்டுமே உள்ளன, அதன் பிறகு பொருளாதார தடையை அந்த நாடுகள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

அதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு இடையே நவம்பரில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இதுகுறித்து ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளதாவது:

‘‘ஈரானிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அணுசக்தி ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி, வீதிமீறலில் ஈடுபடும் ஈரானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

அதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அழைக்க வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்கா விதித்த கெடு நெருங்க 10 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள்ளாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் அதனை முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதில் எந்த மாற்றமும் இல்லை. இல்லையெனில் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டும். ஈரானுக்கும் கூடுதலாக தடைகளை விதிக்க நாங்கள் தயாராகி வருகிறோம்’’ எனக் கூறினார்.

Previous articleஒரே சீட்டுக்கு ரூ. 12,000 கோடி ஜாக்பாட் லாட்டரி பரிசு!
Next article48 ஊழியர்கள் பணிநீக்கம்! கூகுள் நிறுவனத்தை ஆட்டிப்படைக்கும் பாலியல் புகார்!