இலங்கை பிரதமராக ராஜபக்சேவை பதவியில் அமர்த்திய அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவதை தடுக்க நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளார்.
இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை மக்கள் சுதந்திரா கட்சியும், பிரதமர் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியாக அமைத்து ஆட்சியில் இருக்கிறது.
தவறவிடாதீர்
ரத்தத்தில் தண்ணீரை கலந்து 6 மாதங்களாக விற்ற கும்பல் கைது
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார்.
கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை அதிபர் சிறிசேனா பறித்து உத்தரவிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சியான, இலங்கை மக்கள் முன்னணி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது.
சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது.
இந்த சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி அறிவித்தது. புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. இன்னும் பெரும்பான்மைக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ரணில் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்புள்ளது.
இதனால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி இருந்தார். நாடாளுமன்றத்தை கூட்டினால் ரணில் வெற்றி பெற்று, ராஜ பக்சே தோல்வியடையக்கூடும் என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கி, அதிபர் சிறிசேனா இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் நவம்பர் 5-ம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவ்வாறு கூடினால் பெரும்பான்மையை நிருபிக்க போதிய அவகாசம் இருக்காது என்பதால் நவம்பர் 16-ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.