Home Puthumaipithan | புதுமைப்பித்தன் அபிநவ ஸ்நாப்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Abinava Snaip!

அபிநவ ஸ்நாப்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Abinava Snaip!

0
575

அபிநவ ஸ்நாப்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Abinava Snaip!

பாங்கியில் இருந்த இரண்டாயிரத்துச் சில்லறை ரூபாய் ஒத்தி வைக்கப்பட்ட – மாஜி மந்திரி வாசஸ்தலமாக இருந்த பங்களாவிற்கு எதிர்வீடு ‘ஸ்ரீ நிவாஸ்’ ஆனபொழுது, வரதவேங்கடராமன் அபினவ – ஸ்நாப் ஆனார். இந்த விபத்து ஏற்படுமுன் சென்னையின் தொண்ணூற்று ஒன்பதாவது பெரிய குடும்பஸ்தன், சந்துபாய் லல்லுபாய், சணல், வெங்காய வியாபாரக் கம்பெனியின் ஹெட்குமாஸ்தா.

அவருக்கு ஒன்பதாவது வயதில் ஆனி மாதம் (நல்ல சுப லக்கினத்தில்தான்) இந்த விபத்து ஏற்பட்டது.ஸ்நாப் என்றால் என்ன என்பதைச் சொல்லிவிடுகிறேன். நாகரீகமானவர்கள், நல்லவர்கள் (முக்கியமாக மெஜாரிட்டியினர்) அங்கீகரிக்கும் கொள்கைகளை, செய்யும் காரியங்களை ஒப்புக் கொள்வதற்காக, தானும் பின்பற்றுவதாகப் பாவனை செய்தல். அஸ்திவாரமில்லாத கட்டடமாகையால் எப்பொழுதும் மூக்கு கொஞ்சம் நெற்றிக்குமேல் உயர்ந்து காற்றில் மிதக்கும்.

நாசி நுனியில் பார்வையை நிறுத்தினால் என்னவெல்லாமோ தெரியும் என்பார்கள் யோகிகள். தங்க விளிம்பு கண்ணாடி வழியாக மூக்கின் நுனியில் ஸ்நாப்களின் பார்வை கவிந்தே இருக்கும். அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மாத்திரம் நிச்சயமாகத் தெரியும். எதிரில் நிற்கும் உம்மையும் நம்மையும் போன்ற சாதாரண பேர்வழிகள் மனிதப் பிராணிகளாகக் கூட அவர்களுக்குத் தோன்றாது.

ஸ்ரீமான் வரத வேங்கடராமன், இருளப்பன் சந்து 49-ம் நம்பர் வீட்டு மாடியில் ஐந்து குழந்தைகளுடன் (மனைவி ஒன்றுதான்) இருந்தபொழுது – முதல் மகன் சர்வீஸ் கமிஷன் பாஸ் பண்ணி வீட்டிலிருக்கிறான்; ரங்கநாயகிக்குக் கூடிய சீக்கிரத்தில் சாந்தி நடத்த வேண்டும் – கடன் வாங்கத் தெரியும்; மிச்சம் பிடிக்கத் தெரியும்; லல்லுபாய் கணக்குகளை ஆடிட் செய்யத் ‘தயார்’ பண்ணவும், குடும்பத்தின் நுணுக்க விவகாரங்களில் உள் வீட்டு மந்திரியுடன் அபிப்ராய பேதம் கொள்ளவும் தெரியும்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ‘ஹிந்து’ பத்திரிகை என்று ஒன்று இருப்பதாகத் தெரிந்துகொண்டார். அவரது கடைசிப் பதிப்பு – ஆப்டோ ன் படங்கள் அடங்கியவை அல்ல – சிந்தாமணிப் பாட்டுப் பாடியபொழுது தமிழில்கூட பேசுகிற பயாஸ்கோப் வந்துவிட்டதாகத் தெரிந்து கொண்டார்.அன்று சேட்ஜி விஷயமாக – சென்னையில் வடக்கத்தியார் யாவரும் ‘சேட்ஜி’ தான் – லஞ்ச் ஹோம் பக்கமாகப் போனபொழுது அந்தத் தறிதலை மணி அவரை ஹோட்டல் வாசலில் சந்தித்தான்.

காப்பி சாப்பிட்டு முடியுமுன் புது மாம்பலம் ‘ஸ்ரீ நிவாஸ்’ அவர் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. பாங்க் டிபாஸிட் அப்புறம் பெயர் மாறியது. சில்லறை விஷயந்தானே. அன்றைக்கு வீட்டுக்குப் போகும்போது அவருடைய நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொண்டது. ஆனால் தெய்வ சங்கல்பமாக, பூக்காரன் கை நிறைய கனகாம்பரமும் கொஞ்சம் நீளமாகவே கதம்பமும் கொடுத்துவிட்டுப் போயிருந்தது அவருக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நெஞ்சு அவ்வளவு வேதனைப்பட்டிருக்காது.

பூரண சுதந்திரம் அடைந்துவிட்டால் நமக்கெல்லாம் எவ்வளவு குதூகலம் இருக்குமோ அவ்வளவு கண்மண் தெரியாத மகிழ்ச்சி இருளப்பன் சந்து 49-ம் நம்பர் மாடியில். பங்களாவை வாங்கி விட்டதாகவே நினைத்துவிட்டாள் சகதர்மிணி. செய்தி கிடைத்த அரைமணி நேரத்துக்கெல்லாம் கீழே வசிக்கும் ஒட்டுக் குடித்தனங்களுக்கெல்லாம் டபிள் காலம் பதிமூன்று திக்கில் ஸ்ட்ரீமர் தலைப்பு அலங்காரங்களுடன் விசேஷப் பதிப்பு விநியோகிக்கப்பட்டது. வேறு என்ன சொல்ல வேண்டும்? அன்று ஸ்ரீமான் வரத வேங்கடராமன் அவரது குடும்பத்தினர் முன் ‘மாபெரும் வீரராகவே’ திகழ்ந்தார்.

விசுவரூப தரிசனம் குடும்ப நபர்களுக்குக் கிட்டியது என்னலாம்.“அப்பா ஒரு கூச் வச்சிப்பிட்டா நீ காலம்பர ஒன்பதுக்குள்ளேயே எலக்ட்ரிக் ட்ரெயினிலே போயிடலாம். ஒரு செக்கண்ட் கிளாஸ் பாஸ் வாங்கினாப் போரது…” என்றான் ‘கருவிலுருவாகும்’ கவர்மெண்ட் குமஸ்தா.“நம்ம ரங்கத்துக்கு வர்ற ஆவணியிலேயே நல்ல நாளாய்ப் பார்த்து நம்ம பங்களாவிலேயே மோஸ்தராகச் செய்யணும்” என்றாள் கனகாம்பரம் – வைக்கோல் போரைச் சுமந்த சகதர்மிணி.

“இதிலென்ன பிரமாதம்” என்றார் ஸ்ரீமான் வரத வேங்கடராமன், சிவபுரியை ஆசமனம் பண்ணிக்கொண்டு.கம்பன் தன் கதாபாத்திரத்தின் பூரிப்பைக் குறிக்க, ‘வாம மேகலையினுள் வளர்ந்த தல்குலே’ என்கிறான். ஆனால் எனது ஜுனியர் கனகாம்பரம் – வைக்கோல் போர் கதம்பத்தின் உள்ள நிகழ்ச்சி பற்றி எனக்குத் தகவல் இல்லை.சின்னமணியின் சிந்தாமணிப் பாட்டுகளுக்குப் பதிலாக ‘ஸ்ரீ நிவாசில்’ ரேடியோ வைத்துவிடுவது என்று நிச்சயமாயிற்று…மாஜி இருளப்பன் சந்து 49ம் நெ.

மாடிவாசியை இப்பொழுது உங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அவர் ஸ்ரீ.வி.வி.ராமன். பித்தளை போர்ட் தொங்குகிறதே, அதைப் பார்த்தாவது தெரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது அவர் டவுனில் ‘பிஸினஸ்’ பண்ணுகிறார் (தொழில் மாறவில்லை – சந்துபாய் லல்லுபாயில் ஆடிட்டுக்கு கணக்கு ‘தயார்’ செய்வதுதான் – பெயர் மாறிவிட்டது).

காலை ஒன்பது மணிக்கு சுந்துவின் வேகாத உருளைக்கிழங்கு சாம்பார் – விட்டமின் போகாதிருக்க – உள்ளும் உணர்வும் சுடும் ரஸம், அதற்கெதிர்த்த தன்மை படைத்த தயிர் இவற்றைக் கனவேகமாக உள்ளே செலுத்திவிட்டு கனவேகமாக செகண்ட் க்ளாஸில் – பாஸ் வாங்கியதன் பயனாக – நின்றுகொண்டே பீச் ஸ்டேஷன் வரை யாத்திரை – இந்தப் பேறுகள் யாவும் ஸ்ரீமான் வி.வி.ராமனுக்கு.இரண்டாயிரத்துச் சில்லறைக்கு மாறிய ‘ஸ்ரீ நிவாஸ்’ ரெடிமேட் செமண்ட் விஷயமானாலும் ஜப்பான் சரக்கைப் போல மினுக்குள்ளது. அதோடு எதிர் பங்களா மாஜி சுகாதார மந்திரி வசித்த இடம்.

ரங்கத்தின் சாந்தி ஏகமோக்களா. விசேஷ கலாபவனத்தில் மட்டிலும் பிரத்யேகமாகக் கீழைப் பிரதேச நாட்டியத் திறமையை விளக்கும் குமாரி பானுசுமதி – பங்கஜத்தின் பரத நாட்டியம். ‘ஸ்ரீ நிவாசில்’ கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? சாக்ஷாத் சர்க்கார் செக்ரடரியேட்டில் ஆயுளில் முக்கால்வாசியைக் கழிக்கும் பெரிய உத்யோகஸ்தர்கூட வந்திருந்தார். குமாரி பானுசுமதி – பங்கஜத்தின் நாட்டியமென்றால் சகாரா பாலைவனத்திலும் கூட அவரைப் பார்க்க முடியும் என்பது ஸ்ரீமான் வி.வி.ராமனுக்குத் தெரியாது.குமாரி பானு… இத்யாதி இத்யாதிக்கு சங்கீதத்திலும் பிரபலம். பலர் ‘சபாஷ்!’ சொன்னார்கள்.

‘ஐயோ…!’ நீட்டலாகச் சொல்லி நயத்தில் தெவிட்டி மகிழ்ந்தார்கள்.“சங்கீதம் ஒரு சமுதாயத்தின் ஜீவநாடி!” என்றார் ஒரு மாஜி நீதிபதி நரைத்தலையை ஆட்டிக்கொண்டு.“ஜீவநாடியின் துடிதுடிப்பு என்று சொல்லுங்கள் சார்!” என்றார் சகாராவுக்கும் துணியும் தீர உத்யோகஸ்தர்.‘மனமாகிய மாயையிலேஅருளாகிய கோவிலிலே’என்பதற்கு அபிநயம் பிடித்தாள் குமார் பானுசுமதி இத்யாதி.“நாட்டியம் என்றால் குமாரி, குமாரி என்றால் நாட்டியம்” என்று சொன்னார் விசேஷ கலாபவன நிரந்தர பிரஸிடண்ட்.“ஆர்ட்ன்னா கலை, கலைன்னா ஆர்ட்” என்றார் தமக்கு இங்கிலீஷ் தெரிந்ததாக நினைத்துக் கொண்ட சங்கீத பூஷணம் பால கந்தர்வ தாதாசார்யார்.“ஆஹா!”

என்றார் அவரது பின்பாட்டுக்காரர்.“என்னடா பாபு, சங்கீத பூஷணத்தை ரொம்ப நாளாக் கேட்கல்லியே, வர்ற சீசன்ல ஒரு ஸ்பெஷல் வீக் (வாரம்) ஒதுக்கிவிடு” என்று உத்தவரவு போட்டார் மாஜி நீதிபதியொருவர்.“கம்பன் சொல்ரான் பார் ஒரு இடத்திலே…” என்று ஆரம்பித்தார் ஒரு கலாரஸிகர்…“அதெல்லாம் உள்ளுணர்வு சார்… அந்த சமுதாயத்திலே துன்பமும் இல்லை. மரணமும் இல்லை. சாயுஜ்ய பதவி ஸார். கனவு லோகம் – ஞானரதம்” என்று அடுக்கிக்கொண்டே போனார் ஒரு ஆர்ட் கிரிடிக்.ஸ்ரீமான் வி.வி.ராமனுக்கு இது ஒன்றும் புரியவில்லை. அவரது சங்கீத ஞானம் அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ குட்டி பாலர் வகுப்பு, ‘தந்தம் தந்தம் தனதினனா! தந்திரக் குரங்கின் மோசம் பார்’ என்ற அளவிலேயே நின்றுவிட்டது.

ரங்கத்தின் ஞானம் ஞாயமாக எல்லாரும் புரிந்துகொள்ளும் பெட்டி வாசிப்புடன் நின்றுவிட்டது. அவளுக்கும் பரத நாட்டியம் ஒரு புது தினுசு சர்க்கஸ் மாதிரி இருந்தது.

தகப்பனாருக்கும் பெண்ணுக்கும் இந்த விஷயத்தில் ஏகமனதான அபிப்பிராயம். ஆனால் வந்திருந்தவர்களுடன் கலை பேசினார்கள். ஸ்ரீமதி ராமன் பதிர்பேணி சிருஷ்டியில் ஈடுபட்டிருந்தால் சிரமமில்லாமல் போயிற்று. இல்லாவிட்டால், ‘ஏண்டி இவள் இப்படி அம்மணமா வந்து ஆடறாள்’ என்று வெடிகுண்டு ஏறிந்திருப்பாள். நாட்டியத்தின் விளைவாக ஸ்ரீ.வி.வி.ராமன் விசேஷ கலாபவனத்தின் கௌரவ அங்கத்தினர் ஆனார்.27-வது அகில இந்திய சங்கீத மகாநாட்டில் ‘பரத நாட்டியமும் ஆத்ம பலமும்’ என்ற பொருள் பற்றி அரிய உபன்னியாசம் செய்தார். பையன் குமாரியின் சதங்கை ஒலியில் சிதறிப் போகாமலிருந்த காரணம் காட்பாடியில் ஸ்பெஷல் மலேரியா எதிர்ப்பு உத்யோகஸ்தர் பர்ஸனல் கிளார்க்காகச் சென்றதுதான்.

இல்லாவிட்டால் பையனும் கலை பண்ண ஆரம்பித்திருப்பான்.‘ஸ்ரீ நிவாஸ்’ வாழ்வு குஷாலாகக் கழிந்தது என்றாலும் குடும்ப வரவு செலவுக் கணக்கு, வாராவாரம் நடைபெறும் விசேஷக் கலை வகுப்புகள் முதலியவற்றின் விளைவாக நிரந்தரமாக பிரஞ்சு பட்ஜெட்டாக – நஷ்டக் கணக்கு – மாறியது. மாதத்தின் சில தேதிகள் குடும்ப எரிமலைகள் சீறின என்றாலும் நெருப்புக் கக்கும் நிலையை எட்டவில்லை.அன்று ஒரு ஞாயிற்றுகிழமை.

‘ஸ்ரீ நிவாஸ்’ ரேடியோ ஸ்ரீமான் உச்சி பாகவதரின் கிராமிய கீதங்கள் யந்திர கமறலுடன் பாடிக் கொண்டிருந்தது…அப்பொழுது தறிதலை மணி வந்தான்.“என்னடா மணி காண்றதே இல்லியே! ஏண்டா குமாரியின் ஆத்மிக டான்ஸ்க்கு வரலே… அன்னிக்கு சபையில் கிருஷ்ணன் வந்து பொன் கொரல்லே உபதேசம் பண்ணாப்லே இருந்தது. நம்ம நாகரீகத்து ஜீவத் துடிதுடிப்புடா? உள்ளுணர்வு அப்படியே பேசித்து; மயிர்க் கூச்சலிட்டதா!” என்று பரவசப்பட்டார்.“அது சரிதான்டா, பங்களாவை மீட்கலாம்னு நினைக்கிறேன், என்ன சொல்றே!”“எனக்கே கொடுத்திடேன்” என்று வார்த்தை பின்தங்கியே வந்தது.

“இல்லடா, அதுமேலே எனக்கு ஒரு பற்றுதல்; அது என் அதிர்ஷ்ட சக்கரம்” என்றான் மணி.ஸ்ரீமான் வரத வேங்கடராமன் நிம்மதியாக மூச்சுவிட்டார். இருளப்பன் சந்துக்குப் போவதா, மாரியப்பன் தெருவுக்குப் போவதா என்று அவர் மனம் பிளான் போட ஆரம்பித்தது.“அன்னிக்கு உடம்புக்கு என்னமோன்னியே, டொமாட்டோ சாப்பிடு, எல்லா விட்டமினும் இருக்கு” என்று உபதேசம் செய்தார் கடைசி முறையாக ஸ்ரீ வி.வி.ராமன். அதற்கப்புறம் அவர் குமாஸ்தா வரத வேங்கடராமனாகிவிட்டார்.

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

Previous articleஅவதாரம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Avathaaram!
Next articleமனித யந்திரம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Manitha Yanthiram!