Thirukkural Iravacham Adhikaram-107 திருக்குறள் இரவச்சம் அதிகாரம்-107 ஒழிபியல் /குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil இரவு அச்சம்

0

Thirukkural Iravacham Adhikaram-107 (Iravu Acham) திருக்குறள் இரவச்சம் அதிகாரம்-107 ஒழிபியல் /குடியியல் பொருட்பால் Thirukkural Iravacham Adhikaram-107 Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil. திருக்குறள் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-107 ஒழிபியல் இரவு அச்சம் /குடியியல் இரவு அச்சம்.

Thirukkural Iravacham Adhikaram-107

Thirukkural Iravacham Adhikaram-107

திருக்குறள் பா: 1061
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

kural 1061: karavaadhu uvandheeyum kannannaar kannum iravaamai koti urum

திரு மு.வரதராசனார் பொருள்:
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

மணக்குடவர் பொருள்: தமக் குள்ளது கரவாது இவர் வரப்பெற்றேமென்று உண் மகிழ்ந்துகொடுக்குங் கண்போலச் சிறந்தார்மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல் செல்வமெய்தலிற் கோடிமடங்கு நன்று.

கலைஞர் பொருள்: இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடைவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்: ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.

திருக்குறள் பா: 1062
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

kural 1062: irandhum uyirvaazhdhal ventin parandhu ketuka ulakiyatri yaan

திரு மு.வரதராசனார் பொருள்:
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

மணக்குடவர் பொருள்: துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.

கலைஞர் பொருள்: பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

சாலமன் பாப்பையா பொருள்: பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

திருக்குறள் பா: 1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

kural 1063: inmai itumpai irandhudheer vaamennum vanmaiyin vanpaatta thil

திரு மு.வரதராசனார் பொருள்:
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

மணக்குடவர் பொருள்: வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பே மென்று கருதுகின்ற வன்மைபோல, வன்பாயிருப்பது பிறிது இல்லை. இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது.

கலைஞர் பொருள்: வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்: இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.

திருக்குறள் பா: 1064
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

kural 1064: itamellaam kollaath thakaiththe itamillaak kaalum iravollaach chaalpu

திரு மு.வரதராசனார் பொருள்:
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.

மணக்குடவர் பொருள்: தஞ்சுற்றத்தளவு தமக்கு வருவாய் இல்லாக் காலத்தினும் பிறரை இரத்தற்கு இசையாத சால்பு, அகன்ற உலகமெல்லாம் கொள்ளாத பெருமையே யுடைத்து. இஃது இரவாதார் பெரிய ரென்றது.

கலைஞர் பொருள்: வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.

சாலமன் பாப்பையா பொருள்: ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.

திருக்குறள் பா: 1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

kural 1065: thenneer atupurkai aayinum thaaldhandhadhu unnalin oonginiya thil

திரு மு.வரதராசனார் பொருள்:
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் பொருள்: மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும் தனது தாளாண்மையால் வந்ததனை உண்ணுதலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை.

கலைஞர் பொருள்: கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்: நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

திருக்குறள் பா: 1066
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

kural 1066: aavirku neerendru irappinum naavirku iravin ilivandha thil

திரு மு.வரதராசனார் பொருள்:
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

மணக்குடவர் பொருள்: இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை. இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.

கலைஞர் பொருள்: தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

சாலமன் பாப்பையா பொருள்: பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

திருக்குறள் பா: 1067
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

kural 1067: irappan irappaarai ellaam irappin karappaar iravanmin endru

திரு மு.வரதராசனார் பொருள்:
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

மணக்குடவர் பொருள்: பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ள நின்றேன்: இரக்குமிடத்து இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி. இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதியுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.

கலைஞர் பொருள்: கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.

சாலமன் பாப்பையா பொருள்: பிச்சை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றால், தம்மிடம் இருப்பதை மறைப்பாரிடம் பிச்சை எடுக்க வேண்டா என்று, பிச்சை எடுப்பவரிடம் எல்லாம் நாம் பிச்சை கேட்கின்றேன்.

திருக்குறள் பா: 1068
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

kural 1068: iravennum emaappil thoni karavennum paardhaakkap pakku vitum

திரு மு.வரதராசனார் பொருள்:
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.

மணக்குடவர் பொருள்: ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி, இரக்கப்பட்டார் மாட்டுக் கரத்தலாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும். இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று.

கலைஞர் பொருள்: இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.

சாலமன் பாப்பையா பொருள்: வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.

திருக்குறள் பா: 1069
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

kural 1069: iravulla ullam urukum karavulla ulladhooum indrik ketum

திரு மு.வரதராசனார் பொருள்:
இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

மணக்குடவர் பொருள்: இரப்பென்று நினைக்க உள்ளம் கரையும்: இரக்கப்பட்டவர் கரக்கு மதனை நினைக்கக் கரைந்து நின்ற உள்ளமும் மாய்ந்து கெடும். இஃது இரப்பார்க்கு ஆக்கமில்லை என்றது.

கலைஞர் பொருள்: இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.

சாலமன் பாப்பையா பொருள்: பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.

திருக்குறள் பா: 1070
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

kural 1070: karappavarkku yaangolikkum kollo irappavar sollaatap poom uyir

திரு மு.வரதராசனார் பொருள்:
இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.

மணக்குடவர் பொருள்: எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்குக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்: பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ. இது பிணத்தை யொப்பரென்றது.

கலைஞர் பொருள்: இருப்பதை ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?.

சாலமன் பாப்பையா பொருள்: இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleThirukkural Panbu Udaimai Adhikaram-100 திருக்குறள் பண்புடைமை அதிகாரம்-100 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal / Kudiyiyal Porutpal in Tamil பண்பு உடைமை
Next articleKarumbu கரும்பு Karumbu Juice கரும்பு ஜூஸ் Karumbu Saaru கரும்பு சாறு Sugarcane Benefits Medicine Karumbu in Tamil