Thirukkural Avaavaruththal Adhikaram-37 திருக்குறள் அவாவறுத்தல் அதிகாரம்-37 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil

0

Thirukkural Avaa Aruththal Adhikaram-37 (avaa aruththal) திருக்குறள் அவாவறுத்தல் அதிகாரம்-37 துறவறவியல் அறத்துப்பால் Thirukkural Avaa Aruththal Adhikaram-37 Thuraviyal Arathupal in Tamil. திருக்குறள் அவாவறுத்தல் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-37 துறவறவியல் அறத்துப்பால். அவாவறுத்தல் Avaa Aruththal Thirukkural by Thiruvalluvar. Thirukkural Avaa Aruththal Chapter-37. அவா அறுத்தல் அதிகாரம் 37.

Thirukkural Avaa Aruththal Adhikaram-37

திருக்குறள் பா: 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

kural 361: avaaenpa ellaa uyirkkum enj gnaandrum thavaaap pirappeenum viththu

திரு மு.வரதராசனார் பொருள்:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

மணக்குடவர் பொருள்:
எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது

கலைஞர் பொருள்:
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

சாலமன் பாப்பையா பொருள்:
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

திருக்குறள் பா: 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

kural 362: ventungaal ventum piravaamai matradhu ventaamai venta varum

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

மணக்குடவர் பொருள்:
வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

கலைஞர் பொருள்:
விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

திருக்குறள் பா: 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.

kural 363: ventaamai anna vizhuchchelvam eentillai aantum aqdhoppadhu il

திரு மு.வரதராசனார் பொருள்:
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

மணக்குடவர் பொருள்:
அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை. இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.

கலைஞர் பொருள்:
தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

சாலமன் பாப்பையா பொருள்:
எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

திருக்குறள் பா: 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

kural 364: thoouymai enpadhu avaavinmai matradhu vaaaimai venta varum

திரு மு.வரதராசனார் பொருள்:
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

மணக்குடவர் பொருள்:
ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும் இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.

கலைஞர் பொருள்:
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

திருக்குறள் பா: 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

kural 365: atravar enpaar avaaatraar matraiyaar atraaka atradhu ilar

திரு மு.வரதராசனார் பொருள்:
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

மணக்குடவர் பொருள்:
பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.

கலைஞர் பொருள்:
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

திருக்குறள் பா: 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

kural 366: anjuva thorum arane oruvanai vanjippa thorum avaa

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

மணக்குடவர் பொருள்:
ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம். வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.

கலைஞர் பொருள்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

திருக்குறள் பா: 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

kural 367: avaavinai aatra aruppin thavaavinai thaanventu maatraan varum

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

மணக்குடவர் பொருள்:
ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.

கலைஞர் பொருள்:
கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

திருக்குறள் பா: 368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

kural 368: avaaillaark killaakun thunpam aqdhuntel thavaaadhu menmel varum

திரு மு.வரதராசனார் பொருள்:
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

மணக்குடவர் பொருள்:
ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.

கலைஞர் பொருள்:
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

திருக்குறள் பா: 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

kural 369: inpam itaiyaraa theentum avaavennum thunpaththul thunpang ketin

திரு மு.வரதராசனார் பொருள்:
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

மணக்குடவர் பொருள்:
அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.

கலைஞர் பொருள்:
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

திருக்குறள் பா: 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

kural 370: aaraa iyarkai avaaneeppin annilaiye peraa iyarkai tharum

திரு மு.வரதராசனார் பொருள்:
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

மணக்குடவர் பொருள்:
நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.

கலைஞர் பொருள்:
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒரு காலமும் முடிவு பெறாத குணததை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleSani Peyarchi Palangal Viruchigam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் 2020-2023 Scorpio Astrology Viruchiga Rasi விருச்சிக ராசி
Next articleThirukkural mei unarthal Adhikaram-36 திருக்குறள் மெய்யுணர்தல் அதிகாரம்-36 துறவறவியல் அறத்துப்பால் Thuraviyal Arathupal in Tamil