கற்றாழை ஜெல் தேங்காய் பால் கலந்து தலை முடிக்கு தடவி மசாஜ் செய்யுங்க‌! இந்த பிரச்சனைகள் ஓடிவிடும்!

0

அழகுக் கூந்தலைக் கார்மேகத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், கார்மேகக் காலத்தில் கூந்தல் தன் இயற்கையான அழகையும் பொலிவையும் இழக்கிறது என்பதை அறிவீர்களா? மழை மற்றும் குளிர் நாள்களில் கூந்தல் உதிர்வு, பொடுகு, வறட்சி போன்ற பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

மற்ற நாள்களைவிடவும் மழைநாள்களில் கூந்தல் பராமரிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட வேண்டும். அப்படிச் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போமா?

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து டபுள் பாய்லிங் முறையில் (தண்ணீரைக் கொதிக்கவைத்து அதன்மேல் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை வைத்துச் சூடாக்கும் முறை) லேசாகச் சூடாக்கவும். கறிவேப்பிலைப் பொடி, நெல்லிக்காய்பொடி, மருதாணிப் பொடி மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு, அடுப்பை அணைத்துவிடவும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி, மசாஜ் செய்யவும். பின்னர், வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலைக்கு ஒத்தடம் கொடுத்து, பிறகு கூந்தலை அலசவும். இது வறட்சியையும் பொடுகையும் நீக்கி, கூந்தலை மிருதுவாக்கும்.

மழை நாள்களில் அடிக்கடி தலைக்குக் குளிக்க முடியாமல் போகலாம். அதனால் வறட்சி, பிசுபிசுப்பு, பொடுகு போன்றவை அதிகரிக்கும். ஒரு மூடி தேங்காயை அரைத்துப் பால் எடுத்துக்கொள்ளவும். அதில் கற்றாழையின் சதைப்பகுதி அல்லது வாசனையோ, கெமிக்கலோ கலக்காத கற்றாழை ஜெல் கலந்துகொள்ளவும். கூந்தலைச் சிறு பகுதிகளாகப் பிரித்து இந்தக் கலவையைத் தடவி, வட்டமாக மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசினால் வேர்க்கால்கள் பலப்படும். வறட்சியும் பொடுகும் நீங்கும்.

சம அளவு பாதாம் எண்ணெயும் நெல்லிக்காய்ச் சாறும் கலந்துகொள்ளவும். கூந்தலைப் பகுதிகளாகப் பிரித்து இந்தக் கலவையைத் தடவி, மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊறவைத்து அலசவும். இது கூந்தலுக்கு அழகான தோற்றத்தையும் ஆரோக்கியத்தையும் தரும்.

இரண்டு கைப்பிடி அளவு வேப்பிலையை அரை பக்கெட் தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, தலையை அலசவும். இது பொடுகை விரட்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது விளக்கெண்ணெயும், அரை டீஸ்பூன் கிளிசரினும் கலந்து தலையில் தடவி, ஊறவைத்துக் குளிக்கவும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலை வலுப்படுத்தும் சிகிச்சை இது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன் என்ன தெரியுமா!
Next articleதிருமண வரம் தரும் வரலட்சுமி விரதம்!