எந்தெந்த தானங்களை செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.அதைப்பற்றி இங்கே பார்ப்போம்…
தானங்களில் பல வகை உண்டு. அதே போல நாம் செய்யும் ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. ஆனால் பலனை எதிர்பார்த்து தானம் செய்வதால் எந்த பலனும் இல்லை. நம் உளமார தானத்தை செய்தால் மட்டுமே நற்பலன்கள் என்பதை நன்குணர்ந்து செயல்படுவோம்.
அன்னதானம் :
தானத்தில் மிக சிறந்த தானமாக கருதப்படுவது அன்னதானம். உண்மையில் பசியால் வாடும் ஏழைகளுக்கு வயிறார உணவளிப்பதன் மூலம் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகி வீட்டில் செல்வம் நிறையும்.
அரிசிதானம் :
மடி பிச்சை கேட்டு நம் வீடு தேடி பலர் வருவதுண்டு. அப்படி வருபவர்களுக்கு அரிசி தானம் அளிப்பது சிறந்தது. அதோடு உணவின்றி வாழும் ஏழை குடும்பத்திற்கு அரிசியை தானம் அளிப்பதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
பால்தானம் :
நோயுற்ற ஏழை எளியோருக்கு பாலை தானமாக அளிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள துக்கங்கள் அனைத்தும் விலகும்.
நெய் தானம் :
இறைவனின் அபிஷேகத்திற்கு நெய்யை தானமாக அளிப்பதன் மூலம் உடல் பிணிகள் நீங்கும்.
தேங்காய்தானம் :
நல்ல காரியங்களுக்காக தேங்காயை தானமாக அளிப்பதன் மூலம் நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
தீபதானம் :
கோவில்களில் உள்ள தீபத்திற்கு எண்ணெயை தானமாக அளிப்பது, பிறர் வீட்டில் விளக்கெரிய உதவுவது போன்ற நர் செயல்களை செய்வதன் மூலம் கண் பார்வை சிறப்பாக இருக்கும். அதோடு நம் பித்ருக்கள் பாவம் செய்து அவர்களை இருள் சூழ்ந்திருந்தால் அந்த அருள் அவர்களை விட்டு விலகும். இதன் மூலம் பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
தேன்தானம் :
கடவுளின் அபிஷேகத்திற்காக தேனை தானமாக அளிப்பதன் மூலம் புத்திர பாக்கியம் உண்டாகும்.
பூமி தானம் :
கோவில் கட்டுவதற்கு இடத்தை தானமாக அளிப்பது. வீடின்றி தவிக்கும் ஏழை எளியோருக்கு வீடு கட்டிக்கொள்ள இடத்தை தானமாக அளிப்பது போன்ற செயல்களை செய்வதன் மூலம் ஏதோ ஒரு வகையில் சிவனை தரிசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
பழங்கள் தானம் :
நோயுற்ற ஏழை எளியோருக்கு பழங்களை தானமாக அளிப்பதன் மூலம் நம் புத்தி தெளிவடையும்.
வஸ்திர தானம் :
உடுத்த ஆடை இன்றி தவிக்கும் ஏழைகளுக்கு ஆடைகளை தானமாக அளிப்பதன் மூலம் ஆயுள் விருத்தியடையும்.