கோவையில் மனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கொலை செய்துவிட்டு, கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேடப்பட்டி அருகே இருக்கும் நஞ்சப்ப கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து (65). இவர் பூ மார்க்கெட் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். இவரது இரண்டாவது மனைவி சுப்பாத்தாளுக்கும் (60) மாரிமுத்துவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மாரிமுத்துவின் தம்பி கிருஷ்ணன் மனநிலை பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், அவரை கவனித்துக் கொள்வதில் சுப்பாத்தாள் மெத்தனம் காட்டுவதாக பலமுறை அடிதடி வரை சென்றுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாரிமுத்து சமையல் சிலிண்டரை எடுத்து படுத்திருந்த மனைவி சுப்பாத்தாள் தலையில் போட்டார். இதில், மனைவி சுப்பாத்தாள் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறிது நேரத்தில், நிதானத்திற்கு வந்த மாரிமுத்து மனைவியை கொலை செய்த வேதனையில், வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார் உடல்களை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.