ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. திராட்சையில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. திராட்சையில் பல வகை உண்டு ஆனால் நமக்கு அதிகம் பரிச்சயமானது கருப்பு, சிகப்பு, பச்சை மற்றும் பன்னீர் திராட்சை தான். அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு ஏற்றது. பச்சை திராட்சை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. எண்ணற்ற மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. திராட்சையில் அதிகம் சர்க்கரைச் சத்து உள்ளது. ப்ரக்டோஸ், பெக்டின், கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.
ஜீரணக் கோளாறுகளுடன் இருப்பவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பச்சைத் திராட்சையானது குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. பசி இல்லாததால் சாப்பிட முடியாமல் அவதிப்படுபவர்கள் அடிக்கடி பச்சை திராட்சையை உண்டுவர பசி தூண்டப்படும். ஜீரண கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், ரத்த சோகை, மலச்சிக்கல் என்பவற்றை போக்கும் சக்தி பச்சைத் திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். இதயம், கல்லீரல், மூளை மற்றும் நரம்புகள் வலுப்பெறும். ரத்தம் தூய்மை பெறும்.
உடல் சோர்வு உடல் அசதி, கை, கால் நடுக்கம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர குணம் கிடைக்கும். எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்கள் தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மனோ தைரியம் ஏற்படும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளவர்கள் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வர புண்கள் ஆறிவிடும்.இது உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் திராட்சை சாப்பிட கூடாது.
மாதவிடாய்க் கோளாறுகள் உள்ள பெண்கள் தினசரி பச்சைத் திராட்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர சரியாகும்.
காலை உணவுக்குப் பின்னர் தினசரி பச்சை திராட்சை சாப்பிட்டு வர இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு இருதயம் பலப்படுவதோடு எலும்புகள், பற்கள் பலமாகும்.
திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும். பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்தை போக்க திராட்சை சிறந்தது. சிறு நீர் எரிச்சல் மற்றும் சொட்டு சொட்டாக நீர் பிரிதல் போன்றவற்றை குணமாக்க திராட்சை சிறந்த மருந்து.
By: Tamilpiththan