உங்களுக்கு அடிக்கடி எதை சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறதா? இப்படி செய்துபாருங்கள்!

0

இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் ஏராளமான மாற்றங்களை சந்தித்து வருகிறோம். நம்முடைய உடல் நல ஆரோக்கியம் முதற்கொண்டு இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. நம்முடைய பாரம்பரியமான உணவுப்பழக்கம் மாற ஆரம்பித்த நாட்களிலிருந்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் கிளம்ப ஆரம்பித்து விட்டன அதற்கு காரணம் நம் நாட்டின் தட்பவெட்ப சூழலுக்கு ஒவ்வாது உணவுகளையே தொடர்ந்து எடுத்து வருவதால் தான்.

இந்தியாவில் பெரும்பாலானோருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கிறது. வழக்கமாக இதனை சாதரண நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது நெஞ்சில் ஏற்படுவதில்லை இது உணவுக்குழாயில் ஏற்படுகிற பிரச்சனை.

காரணம் : நாம் சாப்பிடும் உணவு உமிழ்நீருடன் கலந்து முதற்கட்டமாக செரிமானம் செய்யும் . அது முடிந்த பின்னர் உணவுக்குழாய் மூலமாக உணவு இரைப்பைக்குச் செல்லும். உணவுக்குழாயில் மேல் முனையில் இருக்கும் கதவு நாம் சாப்பிடும் உணவை மூச்சுக் குழாய்க்குள் செல்வதை தடுக்கிறது. உணவுக்குழாய்க்கு கீழ் முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை உணவுக்குழாய்க்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம்.

இரைப்பை அமிலம் : மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு ‘தொளதொள’வென்று தொங்கிவிடும். இதனால் இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும். இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும், அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும்.

‘அல்சர்’ எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு கிடையாது. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

யாருக்கெல்லாம் வரும் : வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.

வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

அதிகக் கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளால் வயிற்றை நிரப்புவது, இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன. நெஞ்செரிச்சல் வராமல் தடுக்க மிதமான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் இரைப்பையில் அமில சுரப்பை கட்டுப்படுத்தும் உணவுகளையும் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

சீரகம் : சீரகம் செரிமானத்தை துரிதப்படுத்த உதவாது என்றாலும் இரைப்பையில் அமில சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை அப்படியே கூட சாப்பிடலாம். அல்லது தினமும் சீரகம் ஊற வைத்த நீரை குடித்து வாருங்கள். நீங்கள் குடிக்க பயன்படுத்தும் தண்ணீரில் கூட சிறிதளவு சீரகத்தை போட்டு வைக்கலாம்.

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலி மற்றும் அதன் இணை காய்கள் இரைப்பையில் அமிலச்சுரப்பை கட்டுப்படுத்தக்கூடியது. ப்ரோக்கோலியில் குறைவான அமிலமே இருக்கிறது என்பதால் இதனை வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி : ஆம், அரிசி உணவுகள் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது. ஒரு நாளில் ஒரு வேளை உணவாவது அரிசி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். உடல் எடையை குறைக்கிறேன் என்று சொல்லி முழுவதுமாக அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டாம் என்று சொல்வதற்கும் இதுவும் ஒரு காரணம்.

வாழைப்பழம் : நெஞ்செரிச்சலை உடனடியாக குறைக்க ஆற்றல் வாழைப்பழத்திற்கு இருக்கிறது. வாழைப்பழத்திற்கு இயற்கையாகவே அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் ‌விரை‌வி‌ல் ‌குணமா‌கி‌விடும்.

இஞ்சி : இஞ்சி செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது இஞ்சி. வெறும் வயிற்றில் தினமும் இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு குறைக்கப்பட்டு உடல் எடை குறையும். அதே நேரத்தில் இஞ்சி அமிலச் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது. அமிலச் சுரப்பும் கட்டுப்படுகிறது. உணவையும் செரிக்க வைப்பதால் நெஞ்செரிச்சல் குறைந்திடும்.

ஆப்பிள் ஜூஸ் : நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். ஆரஞ்சு ஜூஸ் போலன்றி இதில் குறைந்தளவிலேயே அமிலத்தன்மை உண்டு என்பதால் வயிற்றில் நிறைவுத்தன்மையைத் தரும் அதே சமயத்தில் நெஞ்செரிச்சலையும் கட்டுப்படுத்தும்.

ஓட்ஸ் : ஓட்ஸில் குறைந்தளவிலான அமிலம் தான் இருக்கிறது. அதற்காக ஓட்ஸ் கண்டிப்பாக தினமும் சாப்பிட வேண்டும் என்றில்லை. நெஞ்செரிச்சல் ஏற்ப்பட்டு எந்த உணவினையும் சாப்பிட முடியாமல் இருந்தால் ஓட்ஸ் தேர்ந்தெடுக்கலாம்.

பாதாம் : நெஞ்செரிச்சல்,அசிடிட்டி வயிற்று வலி போன்ற பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள் லாக்டோஸ் இருக்கும் பால் பொருட்களை தவிர்த்திடுங்கள். ஏனென்றால் இது உங்கள் உடலுக்கு அதிகப்படியான கொழுப்பினை சேர்க்கும். இதனால் செரிமானம் தடையாகும். பாதாம் பால் எடுத்துக் குடிக்கலாம்.

இளநீர் : இயற்கையாகவே நமக்கு கிடைத்திடும் வரப்பிரசாதம் என்று இதனைச் சொல்லலாம். இதில் குறைந்தளவிலான கலோரிகள் தான் இருக்கிறது. இது உங்கள் உடலை குளர்ச்சியடையச் செய்திடும். உடனடியாக மாற்றம் தெரிய வேண்டும் என்றால் இளநீரை நீங்கள் தாராளமாக குடிக்கலாம். இளநீரில் இருக்கக்கூடிய பயோஆக்டிவ் என்சைம்கள் உணவு செரிமானத்திற்கும் உதவிடும். இதிலிருக்கும் பொட்டாசியம் அமிலச்சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

தொடர்ந்து ஏற்ப்பட்டால் : சிலருக்கு விட்டு விட்டு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படும். இப்படியான பிரச்சனை உங்களுக்கு இருந்தால் நீங்கள் சில உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், அல்லது குறைக்க வேண்டும். காபி, டீ மற்றும் அதிக கேஃபைன் கலந்த பானங்கள் குடிப்பதை தவிர்த்திட வேண்டும். அதே போல உங்களுக்கு அமிலச்சுரப்பு அதிகமிருந்தால் சாக்லேட் தவிர்த்திட வேண்டும். ஏனென்றால் சாக்லெட்டில் methylxanthine இருக்கிறது. இவை அமிலச்சுரப்பை அதிகப்படுத்திடும். மதுபானம், சிட்ரஸ் பழங்கள்,எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.

சாப்பிடுவதில் மாற்றம் : நெஞ்செரிச்சலை தவிர்க்க, நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதைவிட அடிக்கடி சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள். அவசரம் அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும். சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரோஜாப் பூக்களை இப்படி செய்து சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!
Next articleபாசிப்பருப்பை இப்படி பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளி, சுருக்கம், கருமை என்பன மறைந்துவிடும்!