பரிதாபமாக பலியான 8 வயது சிறுமி, வகுப்பறையில் காணப்பட்ட சிறிய துளை!
கேரளாவில் பள்ளி மாணவி வகுப்பறையில் காணப்பட்ட சிறிய ஓட்டை துளை ஒன்றில் காலை விட்டதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வயநாடு அருகே தனியார் பள்ளி ஒன்றில் ஷாஹலா ஷெரின்(8) என்ற சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்றுள்ளார். வகுப்பறையில் சுமார் 3 மணியளவில் அமர்ந்திருந்த சிறுமி, அறையின் சுவற்றின் ஓரத்தில் இருந்த துளை ஒன்றில் விளையாட்டாக தனது காலை விட்ட தருணத்தில், ஏதோ கடித்தது போன்று உணர்ந்துள்ளார். உடனே காலை வெளியே எடுத்துப் பார்த்த போது காயம் ஏற்பட்டு ரத்தம் வருவதைக் கண்ட சக மாணவிகள், வகுப்பாசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே பெற்றோரை அழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ஷெரின் உயிரிழந்துள்ளார். ஆம் வகுப்பறையில் காணப்பட்ட சிறிய துளையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை அறியாமல் சிறுமி செய்த காரியம் கடைசியில் அவரின் உயிரைப் பறித்துள்ளது.