Home Puthumaipithan | புதுமைப்பித்தன் நல்ல வேலைக்காரன் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Nalla Velaikkaran!

நல்ல வேலைக்காரன் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Nalla Velaikkaran!

0
557

நல்ல வேலைக்காரன் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Nalla Velaikkaran!

மார்த்தாண்டம் பிள்ளைக்குக் குடும்பக் கவலை என்ற தொந்தரவு ஒன்றும் கிடையாது. மனைவி இறந்து வெகு நாட்களாகி விட்டது. பிள்ளை குட்டி என்ற விலங்குகள் அவருக்குத் தெரியாது. பொழுது போக்காக ஒரு மருந்து ஷாப் வைத்திருக்கிறார். அத்துடன் கொஞ்சம் லேவாதேவியும் உண்டு.

அவருடைய வேலைக்காரன் ராமன் தம்பி – அவன் ஒரு மலையாளி – வேலைக்காரர்களுக்கு ஒரு இலக்ஷியம். சமையல் முதல் எல்லா வேலைகளையும் ஒரு தவறு வராமல் செய்து வைப்பதில் நிபுணன். அதிலே பிள்ளையவர்களுக்கு அவன் மீது ஒரு பற்றுதல், ஒரு பாசம்.

பிள்ளையவர்களின் கண்ணிற்குக் கண் ராமன் தம்பி. இத்துடன் மட்டுமல்ல. பிள்ளையவர்களின் லீலைகளுக்கு ஏற்ற தூதன். அமைத்து வைப்பதில் நிபுணன். இருவருக்குள் அந்தரங்கமே கிடையாது.

அன்று பிள்ளையவர்கள் ஏதோ கடிதம் எழுத உட்கார்ந்த பொழுது ராமன் ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தான்.

அதைப் பிள்ளையவர்கள் வாசித்துவிட்டு, “ராமா, அந்த ராமசாமி அய்யர் கவலை ஒரு வழியாக ஓய்ந்தது. வக்கீல் பிள்ளையிடம் சொல்லிக் கேஸ் போடலாம் என்று இருந்தேன்.

நல்ல காலம், சாயங்காலம் பணத்தைக் கொண்டு வந்து திட்டமாகக் கொடுத்து விடுவதாக எழுதியிருக்கிறான். லாயர் நோட்டீஸ் விடவேண்டாம் என்று சொல்ல வேண்டும்” என்றார்.

“ஆமாம் ஸ்வாமி, ஒரு கவலை ஓய்ந்தது. கேஸென்றால் கொஞ்ச அலைச்சலா? எத்தனை வருஷம் இழுத்தடிப்பார்கள்” என்றான்.

“நம்மிடம் ஆயிரம் ரூபாய் இருந்தால் எவ்வளவு சௌகரியம்? ஒரு சாயாக் கடை வைத்தால் கவலை இல்லாமல் முதலாளியாக இருக்கலாமே” என்று நினைத்தான் ராமன் தம்பி.

என்றும்விட அன்று அதிக உற்சாகமாக இருந்தான் ராமன். வேலைகள் எல்லாம் வெகு துரிதமாக நடந்தன.

“என்ன ராமா! இப்படி வேலை செய்தால் நாளைக்கு உனக்கு வேலை இருக்காது போலிருக்கிறதே” என்று சிரித்தார் மார்த்தாண்டம் பிள்ளை.

இரவு வந்தது.

எப்பொழுதும்போல் உள் அறையில் சென்று படுத்துக் கொண்டார்.

அன்று நெடுநேரமாக அவருக்குத் தூக்கம் வரவில்லை. என்ன கவலையோ?

இரவு பன்னிரண்டு மணி எங்கோ அடித்தது.

வீட்டில் யாரோ நடமாடும் சப்தம். ‘என்ன திருடனா?’ மார்த்தாண்டம் பிள்ளை பக்கத்திலிருந்த தீப்பெட்டியைத் தடவி விளக்கைக் கொளுத்த முயன்று கொண்டு இருந்தார்.

அப்பொழுது கதவு மெதுவாகத் திறந்தது.

ராமன் தம்பி உள்ளே நுழைந்தான். ஒரு கையில் கொளுத்திய மெழுகுவர்த்தி; இன்னொரு கையில் நீண்ட கத்தி.

மார்த்தாண்டம் பிள்ளை எழுந்தார். உடனே கையிலிருந்த விளக்கையணைத்துவிட்டு, ராமன் கத்தியை ஓங்கிக்கொண்டு இருளில் பாய்ந்தான்.

மார்த்தாண்டம் பிள்ளைக்கு தோள்பட்டையில் ஒரு குத்து. அதைத் தடுக்க முயலுமுன் நெற்றியில் ஒன்று.

“ஐயோ”

அடி வயிற்றில் மற்றொன்று.

“இன்னும் பணம் வாங்கவில்லையடா பாவி, கொன்றுவிடாதே!” என்று ஹீனஸ்வரத்தில் கதறினார் மார்த்தாண்டம் பிள்ளை.

“வாங்கவில்லையா?”

ராமன் கையிலிருந்த கத்தி நழுவிக் கீழே விழுந்தது.

“பொய் சொல்லுகிறாய்.”

“சாயங்காலம் தடிப்பயல் மாட்டேன் என்று காகிதம் எழுதிவிட்டான். மேஜையில் இருக்கிறது பார்!” என்றார்.

படுக்கையிலிருந்து வெகு கஷ்டத்துடன் மேஜையை அணுகினார். படுக்கை எல்லாம் ரத்தம். மேஜை எல்லாம் ரத்தம்; ராமன் கையில் கறை.

உடனே மயக்கம் போட்டுக் கீழே விழுந்துவிட்டார்.

விடியற்காலம்.

மார்த்தாண்டம் பிள்ளைக்குச் சுய அறிவு வந்தது. எழுந்திருக்க முடியாதபடி பலவீனம்.

மறுபடியும் வந்து உயிருடன் இருப்பதைப் பார்த்தால் கொன்று புழக்கடையில் புதைத்து விடுவானோ?

என்ன செய்வது? எழுந்திருக்க முடியவில்லையே!

எங்கு பார்த்தாலும் இரத்தக்கறை. என்ன நாற்றம் நாறுகிறது! எழுந்திருக்க முடியவில்லையே!

மறுபடியும் கதவு திறக்கிறது. இருக்கிற கொஞ்சப் பிராணனும் போய்விடும் போலிருக்கிறது, மார்த்தாண்டம் பிள்ளைக்கு.

உயிருடன் இருப்பதைக் கண்டால் திட்டமாக கொன்று புதைத்து விடுவான். கண்ணை மூடிக்கொண்டு கிடந்தால் போய்விடமாட்டானோ? என்ன நம்பிக்கை! என்ன ஆசை!

ராமன் தான் உள்ளே வந்தான். ஆனால் கொல்ல வரவில்லை. கையிலே பேஸின், மருந்து, இத்யாதி இத்யாதி.

இந்த காயங்களுக்கு வைத்தியரின் கைத்திறனுடன் மருந்து வைத்துக் கட்டுகிறான்.

“செய்த குற்றத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவில்லை. அதற்கு ஏற்ற ஊழியம் செய்கிறேன். என்னைக் காட்டிக் கொடாவிட்டால் நீர் பிழைத்துக் கொள்ளுவீர்.”

குணமான பிறகு பயலைத் தொலைத்து விடுவது என்று எண்ணியிருந்தார் மார்த்தாண்டம் பிள்ளை.

ராமன் எப்பொழுதும் “காட்டிக் கொடுத்தால் என்ன தெரியுமா?” என்று பயங்காட்டி வந்தான்.

ராமனுடைய சேவையில் அவருக்கு புண்கள் குணமடைந்து வந்தன. இப்பொழுது அவருக்கு எழுந்து உட்கார முடியும். அன்று ஒரு யோசனை, ஒரு தந்திரம், அவர் மனதில் பட்டது. நாமும் அவன்மீது பிடி வைத்திருந்தால்தான் குணமடையலாம் என்று பட்டது.

அன்று ராமன் வந்தவுடன் “ராமா, நானும் லாயருக்கு ஒரு ஸீல் போட்ட கடிதம் அனுப்பியிருக்கிறேன். எனக்கு ஏதாவது தீங்கு வந்தால் உன்னைப் பிடித்துக் கொள்வார்கள். எனக்குத் தீங்கு வராமல் இருக்கும்வரை உனக்குப் பயமில்லை” என்றார்.

இன்னும் சில நாட்கள் கழிந்தன. திடீரென்று வீட்டின் வெளிப்பக்கத்தில் ஏகக் கூச்சல்.      இரண்டு போலீஸார்கள் ராமனை உள்ளே தள்ளிக் கொண்டு வருகிறார்கள்.

“கடைசியாகக் காட்டிக் கொடுத்து விட்டீர்களே, உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று போலீஸார் பிடியிலிருந்து திமிறினான்.

“அடே, என்னைக் கொலை செய்ய யத்தனித்ததை யாரிடமும் சொல்லவில்லையே!” என்றார் மார்த்தாண்டம் பிள்ளை.

“ஸார்! நீங்கள் பேசிக் கொள்வது எங்களுக்கு அர்த்தமாகவில்லை. இவன் பக்கத்து வீட்டிலிருந்து நகையைத் திருடியதாகக் கைது செய்திருக்கிறேன்.

திருட்டுச் சொத்து இவன் பெட்டியிலிருந்தது,” என்று ராமனை வெளியே தள்ளிக்கொண்டு போனார்கள் போலீஸ்காரர்கள்.

அப்போது ராமன் முகத்தைப் பார்க்க வேண்டுமே!

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

Previous articleராமனாதனின் கடிதம் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Ramanathanin Kaditham!
Next articleகவந்தனும் காமனும் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – kavanthanum kamanum!