மிரட்டல் விளையாட்டுகள்.. உயிர் குடிக்கும் ஆப்கள்.. டெக்னாலஜியைப் பார்த்து நீ நல்லவனா இல்லை கெட்டவனா என்று கேட்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் நாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அபாயம் செல்போன் வடிவில் நம்மை துளைத்தெடுக்கிறது. முன்பு ப்ளூவேல்… இப்போது மோமோ. மாமா தெரியும்.. அது என்ன மோமோ?
ப்ளூவேல் போலத்தான் இதுவும் ஒரு விளையாட்டு. ஜப்பான் நாட்டில் உருவாக்கியதாக கூறப்படும் “மோமோ சேலஞ்ச்” எனப்படும் ஆன்லைன் விளையாட்டு.
ப்ளூவேல் என்பது நாம் பயன்படுத்தும் ஒரு தனி அப்ளிகேஷன். ஆன்லைன் தளத்திற்கு சென்று தான் விளையாட வேண்டும். ஆனால் இந்த மோமோ சேலஞ்ச் வாட்ஸ் ஆப் மூலம் விளையாடப்படுகிறது. இது ஒரு உயிர் குடிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டின் ஆரம்பம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இதன் முடிவு.. மரணம்.
கடந்த வாரம் அர்ஜென்டினா நாட்டில் 12 வயது சிறுமி அவளது வீட்டின் வெளியே இருக்கும் மரத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள முயன்றுள்ளார். இதனை பார்த்த அவளது அண்ணன் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அவனால் முடியாமல் போகவே அவனது பெற்றோரை கத்தி அழைத்துள்ளான். ஆனால் அவர்கள் வந்து காப்பாற்றுவதற்குள் அந்த சிறுமி உயிர் இழந்துவிட்டாள். இதனைக் கண்ட பெற்றோர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பொழுது அவள் தூக்கு மாட்டிக்கொண்ட இடத்தின் அருகில் அவளது செல்போன் அவள் செய்யும் அனைத்தையும் ரெக்கார்டு செய்யும் வகையில் செட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்.
எஸ்கோபார் பொலிசார் விரைந்துவந்து அங்கிருந்த செல்போனை ஆராய்ந்ததில் அந்த செல்போனில் மோமோ எனப்படும் கேம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி விசாரித்ததில் சில நாட்களுக்கு முன்பு ஒரு முன்பின் தெரியாத புதிய எண்ணிலிருந்து ஒரு மெசேஜ் வந்ததாகவும் அதில் இந்த நம்பரை சேவ் செய்ய சொல்லியும் நாம் பிரண்டாக பழகாலம் நண்பர்களாக இருக்கலாம் என்றும் இருந்தது. அதன்படியே அச்சிறுமியும் அந்த நம்பரை சேவ் செய்துள்ளார்.
அதன் பிறகுதான் ஹேக்கர்கள் விளையாடி விட்டனர். சிறுமியின் பல முக்கிய தகவல்களை அவரிடமிருந்தே கறந்த அவர்கள் இறுதியில் அவரது உயிரையும் பறித்து விட்டனர். பிக்பாஸ் வீட்டில் தரப்படுவது போல இவருக்கும் டாஸ்க் தரப்பட்டுள்ளது. முதலில் நார்மலான டாஸ்க்குகள் கொடுத்துள்ளனர். கடைசியில் தான் தற்கொலை செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர். இவரும் செத்துப் போய் விட்டார்.
ஒரு கட்டத்தில், உனது அந்தரங்க போட்டோக்களை அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என்றும், உனது பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என்றும் மிராட்டியுள்ளனர். வெறும் 12 வயதேயான சிறுமி என்பதால் பயத்தில் அனைத்தையும் செய்துள்ளார். இறுதியில் நீ தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று அந்த சிறுமியிடம் கூறியுள்ளது இந்த மோமோ சைத்தான். அதையும் செய்துள்ளார் இவர்.
வீட்டில் சிறார்களிடம் செல்போனைக் கொடுத்து விட்டு நாம் ஜாலியாக டிவி பார்ப்பதோ அல்லது நமது வேலைகளை செய்வதாக இருந்தால் இன்று முதல் மாறிக் கொள்ளுங்கள். மோமோ உங்களது வீட்டுக்குள்ளும் புகும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.